
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘வெலே சுதா’ என அறியப்படும் கம்பொல விதானகே சமந்த குமாரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த விசேட மேல்முறையீட்டு விண்ணப்பத்தை (Special Leave to Appeal Application) உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, அர்ஜுன ஒபயசேகர மற்றும் சோபித்த ராஜகருணா ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயமே, கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக விசேட மேல்முறையீட்டு அனுமதியை வழங்க மறுத்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இம்மேல்முறையீட்டு மனுத் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சமந்த குமாரவுக்கு விதிக்கப்பட்ட குற்றச்சாட்டும் மரண தண்டனையும் எவ்வித மாற்றமுமின்றி நடைமுறையில் இருக்கும்.
வழக்கின் பின்னணி:
கடந்த 2008 ஆம் ஆண்டு கல்கிஸ்ஸ (Mount Lavinia) பகுதியில் 7.05 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கைவசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், சமந்த குமார குற்றவாளியாகக் காணப்பட்டார். இதனையடுத்து, 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) மனுத் தாக்கல் செய்யப்பட்டது. எனினும், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றமும் அவரது குற்றச்சாட்டையும் மரண தண்டனையையும் உறுதி செய்தது.
இந்நிலையிலேயே, கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகிய இரு நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் சட்டப்பூர்வ தன்மையைக் கேள்விக்குட்படுத்தி, பிரதிவாதி தரப்பால் உயர் நீதிமன்றத்தில் இந்த விசேட மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்விடயத்தில், மேல்முறையீட்டாளர் (குற்றம் சாட்டப்பட்டவர்) சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்யரத்ன ஆஜராகியிருந்தார். அதேவேளை, சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க (ஜனாதிபதி சட்டத்தரணி) ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

