எண்ணெய் வளம் கொழிக்கும் வெனிசுலாவுடன் அமெரிக்கா நீண்ட காலமாக பகைமை உணர்வுடன் இருந்து வருகிறது. 2013 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் அதிபராக இருந்து வருபவர் நிக்கோலஸ் மதுரோ. பயங்கரவாதத்திற்கு ஆதரவு, போதைப்பொருள் கடத்தல், மனித உரிமை மீறல்கள் என பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி, வெனிசுலா நாட்டின் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
வெனிசுலா அரசு, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் நிக்கோலஸ் மதுரோ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆகியோரின் சொத்துக்கள் அமெரிக்காவில் முடக்கப்பட்டுள்ளன. அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், வெனிசுலா அரசுடனும், அதன் அரசு நிறுவனங்களுடனும் நிதி பரிவர்த்தனைகளைச் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால், வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல ஆண்டுகளாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதி வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கூட வெனிசுலாவுடனான எண்ணெய் வர்த்தகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
இந்நிலையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ய உதவுபவர்களுக்கு 438 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நீதித்துறை, நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது உயர் அதிகாரிகள் மீது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
கொலம்பியாவில் செயல்படும் முன்னாள் இடதுசாரி போராளி குழுவான FARC உடன் இணைந்து அமெரிக்காவிற்கு கொக்கைன் போதைப் பொருள் கடத்துவதாக அமெரிக்கா கூறி வருகிறது. 2020 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் மியாமி நீதிமன்றங்களில் மதுரோ மீது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்ததாகவும் பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், வெனிசுலாவிலிருந்து கடத்தப்பட்ட 30 டன் கொக்கைன் பறிமுதல் செய்ததாகவும், இதில் 7 டன் நேரடியாக மதுரோவுக்கு சொந்தமானது என்றும் அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், மதுரோவின் ஆட்சியில் ஊழல், மனித உரிமைகள் மீறல், எதிர்க்கட்சியினர் மீதான ஒடுக்குமுறை ஆகியவை அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மதுரோவை ஆட்சியில் இருந்து அகற்ற திட்டமிட்டு காய் நகர்த்தம் அமெரிக்கா, இதற்காக, ஜுவான் குவைடோ போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பகிரங்கமாக ஆதரவு அளித்து வருகிறது.
2020-ஆம் ஆண்டு மதுரோ மீது முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, அவரை கைது செய்ய உதவி புரிபவர்களுக்கு அமெரிக்கா ஒன்றரை கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்தது. கடந்த ஜனவரி மாதம், மதுரோ மூன்றாவது முறையாக அதிபராக பதவியேற்றபோது, பரிசுத் தொகை 200 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
சுமார் 220 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
August 09, 2025 3:26 PM IST
வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்ய உதவினால் ரூ.438 கோடி பரிசு… அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

