Last Updated:
மதுரோ ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார். இது அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு சவாலாக அமைந்தது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் கைது செய்து கடத்தியுள்ளதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த தகவல் அதிகாரப்பூர்வாக உறுதி செய்யப்படவில்லை.
இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின்னால் பல ஆண்டுகளாக நீடித்த அரசியல் மோதல்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அமெரிக்க நீதித்துறை நிக்கோலஸ் மதுரோ மீது பல ஆண்டுகளாக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தது. மதுரோ மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் அமெரிக்காவிற்குள் டன் கணக்கில் போதைப் பொருளை கடத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
2020-ஆம் ஆண்டிலேயே, மதுரோவை கைது செய்ய அல்லது தகவல் கொடுப்பவர்களுக்கு 15 மில்லியன் டாலர் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. மேலும் வெனிசுலாவில் கடந்த ஜூலை 2024-ல் நடந்த அதிபர் தேர்தலில் பெரும் முறைகேடு நடந்ததாக அமெரிக்கா கருதியது.
இதனை ஒரு “தேர்தல் திருட்டு” என்று வர்ணித்த ட்ரம்ப் நிர்வாகம், மதுரோவை ஒரு சட்டவிரோத ஆட்சியாளராகவே கருதியது. இதுபோன்ற சில காரணங்களால் வெனிசுலாவுக்கும் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்குகள் காணப்பட்டன.
மேலும் மதுரோ ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவு வைத்திருந்தார். இது அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு சவாலாக அமைந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்கப் படைகள் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இதில் அந்நாட்டின் ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டன. இதுகுறித்த சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபட் ட்ரம்ப், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெனிசுலா அதிபரை கைது செய்து கடத்திய அமெரிக்க படைகள்.. உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்


