International
oi-Nantha Kumar R
முனிச்: ஜெர்மனியில் இருந்து வியட்நாம் புறப்பட்ட போயிங் 787-9 ரக விமானத்தில் மொத்தம் 287 பேர் பயணித்தனர். விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்டபோது 2 முறை வேகம் குறைந்தது. இருப்பினும் விமானம் வானில் பறந்தபோது தொழில்நுட்ப பிரச்சனை கண்டறியப்பட்டது. இதையடுத்து 9 ஆயிரம் அடி உயரத்தில் 2 மணிநேரம் வட்டமடித்து தரை இறங்கியது. அப்போது விமானத்தின் வால்பகுதி தரை தட்டி, டயர்கள் வெடித்ததால் பயணிகள் அலறினர்.
ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்தில் இருந்து வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விஎன்34 என்ற விமானம் வியட்நாமின் ஹனாய் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானம் போயிங் 787-9 ரக விமானமாகும்.

விமானத்தில் 271 பயணிகள் பயணித்தனர். இவர்கள் தவிர விமானிகள், விமான பணிப்பெண்கள் என்று 16 பேர் இருந்தனர். மொத்தமாக 287 பேர் விமானத்தில் புறப்பட்டனர்.
இந்த விமானம் முனிச் விமான நிலையத்தில் இருந்து பறக்க தொடங்கியது. அப்போது மொத்தம் 2 முறை விமானத்தின் வேகம் குறைய தொடங்கியது. இருப்பினும் விமானம் மேலே பறக்க தொடங்கியது. விமானத்தின் ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலேழும்பியது. ஆனால் எதிர்பார்த்தபடி விமானத்தால் முழு வேகத்தில் பறக்க முடியவில்லை. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
விமானத்தின் வால்பகுதி தரையில் மோதியிருக்கலாம். டயரில் காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கலாம் என்பதற்கான சமிக்ஞைகள் விமானத்திற்கு கிடைத்தன. இதுபற்றி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் முனிச் விமான நிலையத்திலேயே தரையிறங்கும்படி அறிவுரை வழங்கினர்.
ஆனால் விமானத்தில் நிறைய எரிபொருள் இருந்தது. இதனால் விமானம் தரையிறங்கும்போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் 9 ஆயிரம் அடி உயரத்தில் சுமார் 2 மணிநேரம் வட்டமடித்தபடி சுற்றியது. அதன்பிறகு விமானம் மீண்டும் முனிச் விமான நிலையத்திலேயே தரையிறங்கியது.
இந்த சமயத்தில் விமானத்தின் வால்பகுதி தரையில் மோதி புகை கிளம்பியது. டயர்கள் வெடிக்க தொடங்கின. இருப்பினும் உறுதியாக பைலட் விமானத்தை தரையிறங்கினார். அதிர்ஷ்டவசமாக எந்த பெரிய அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இந்த சம்பவம் கடந்த 15ம் தேதி நடந்த நிலையில் தற்போது அதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


