வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக வடக்கு மாகாண
ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில், வட மாகாணத்தில் இம்முறை வெசாக் பண்டிகைக்
காலத்தில் தன்சல் வழங்குவதற்கும், வெசாக் அலங்காரங்களைச் செய்வதற்கும் வட
மாகாண ஆளுநரால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரவி வரும் செய்தியானது
முற்றுமுழுதாகப் பொய்யானதும் அடிப்படையற்றதுமாகும்.
எந்தவொரு தீர்மானமும் ஆளுநர் செயலகத்தால் எடுக்கப்படவில்லை
அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் ஆளுநர் செயலகத்தால் எடுக்கப்படவில்லை என்பதோடு,
இது தொடர்பில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என்பதை மிகவும்
பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது சமூகங்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவிவரும் இன, மத நல்லிணக்கத்தைச்
சிதைத்து. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் தீய நோக்குடனேயே சில
தரப்பினரால் இவ்வாறான போலியான செய்திகள் திட்டமிட்டுப் புனையப்பட்டுப்
பரப்பப்படுகின்றன.
சமூக வலைத்தளப் பரப்புரைகளுக்கு எதிராக முறைப்பாடு
இவ்வாறான கீழ்த்தரமான மற்றும் காழ்ப்புணர்ச்சி கொண்ட சமூக வலைத்தளப்
பரப்புரைகளுக்கு எதிராக, ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்
உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான அடிப்படையற்ற போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், போலிப்
பரப்புரைகளுக்கு ஏமாறாமல் இன, மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் தொடர்ந்து
பேணுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |


