வீட்டில் எத்தனை சிலிண்டர் வைத்திருக்கலாம்? இந்த விதியை மீறினால் 7 வருஷம் ஜெயில் தண்டனை..!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக கேஸ் சிலிண்டரின் விலை கடுமையாக அதிகரித்தது. அதுவும் கமர்சியல் சிலிண்டர் விலை ரூ.3000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இதனால் கேஸ் முன்பதிவு விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டது. அரசு 21 நாட்களுக்கு ஒரு முறை முன்பதிவு செய்யும் வழக்கத்தையும் 45 நாட்களுக்கு ஒரு முறையாக மாற்றியது.
இதை நினைத்து மக்களும் தங்களுக்கு கேஸ் தீர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் கூடுதல் சிலிண்டர்களை வாங்கி சேமிக்க முயற்சித்தனர். இப்போது கேஸ் விதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒரு நபர் எவ்வளவு சிலிண்டர்களை வீட்டில் வைத்திருக்கலாம் என்பதற்கும் சட்ட ரீதியான விதிகள் இருக்கிறது. அதைத் தாண்டி டொமஸ்டிக் சிலிண்டர்களை வீட்டில் வைத்திருந்தால் அது சட்ட விரோதமாகக் கருதப்படும். இந்தப் பதிவில் ஒரு குடும்பம் எத்தனை கேஸ் சிலிண்டர்களை வைத்திருக்கலாம் என்பதை பார்ப்போம்.
இந்தியச் சட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்தினரும் வீட்டில் இரண்டு 14.2 கிலோ எடையுள்ள டொமஸ்டிக் சிலிண்டர்களை வைத்திருக்கலாம். ஒன்று அடுப்போடு கனெக்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும். மற்றொன்றை அவசரத் தேவைக்காக வாங்கி வைக்கலாம்.

இந்த விதியின் பின்னணியில் கேஸ் பயன்படுத்துபவரின் பாதுகாப்பும் அடங்கியுள்ளது. எல்பிஜி சிலிண்டர்கள் எளிதில் தீப்பற்றக் கூடியவை என்பது அனைவரும் அறிந்தது. இதனால் தான் இந்திய சட்டங்களில் ஒரு வீட்டில் இரண்டு LPG சிலிண்டர்கள் மட்டும் வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களும் எரிவாயு சிலிண்டர் விதிகள் 2016 கீழ் இதே பாதுகாப்பு நடைமுறைகளை தான் பின்பற்றி வருகிறது. அதாவது இரண்டு சிலிண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அப்படியே ஒரு சிலிண்டரை பயன்படுத்தி வந்தாலும் மற்றொரு சிலிண்டரை கண்டிப்பாக காற்றோட்டமான இடத்தில் வைத்திருக்க வேண்டும். 2 சிலிண்டருக்கும் அதிகமான சிலிண்டர்களை வைத்திருக்க லைசென்ஸ் பெற வேண்டும். இதற்கு வணிக நிறுவனங்கள் மற்றும் எல்பிஜி கேஸ் சேமிப்பு கிடங்குகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு சிலிண்டரை பயன்படுத்திக் கொண்டே மற்றொரு சிலிண்டரை தாராளமாக வைத்திருக்கலாம். ஒருவேளை பயன்படுத்தும் சிலிண்டர் தீர்ந்து போனால் மற்றொன்று உதவியாக இருக்கும். ஆனால் வீட்டு தேவையையும் தாண்டி சிலிண்டர்களை வாங்கி விற்பனை செய்வதும் சட்டவிரோதமாகவே கருதப்படும். ஏனெனில் இந்திய சட்ட திட்டங்களின்படி எல்பிஜி சிலிண்டர் ஒரு எஸ்ஸன்ஷியல் கமாடிட்டியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது கேஸ் சிலிண்டர் ஒரு அத்தியாவசிய பொருளாகும். எனவே இதை வாங்கி மீண்டும் கூடுதல் விலைக்கு மறு விற்பனை செய்வது அல்லது தட்டுப்பாடு இல்லாத சூழலில் தட்டுப்பாட்டை உருவாக்கும் நோக்கில் செயல்படுவது போன்றவை சட்டப்படி குற்றமாகும். அப்படி செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அதற்காக சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
என்ன தண்டனை கிடைக்கும்?: ஒருவேளை இரண்டுக்கும் அதிகமான சிலிண்டர்களை வைத்திருப்பவர் கண்டுபிடிக்கப்பட்டால் எஸ்ஸன்ஷியல் கமாடிட்டி சட்டத்தின் ஏழாவது பிரிவின் கீழ் பதுக்கலாக கருதப்படும். அப்படி செய்பவர்களுக்கு 3 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
அதேபோல இந்திய சட்டம் 6வது பிரிவின் கீழ் யாரேனும் ஒருவர் அதிகமான சிலிண்டர்களை வைத்திருந்தால் அதை பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. இதற்கு உடந்தையாக வணிகர்களோ அல்லது டிஸ்ட்ரிபியூட்டர்களோ செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடைய டீலர்ஷிப் உடனடியாக ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

