Last Updated:
கர்நாடகாவில் மனைவி மற்றும் அவரது ரகசிய காதலனை கணவரே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இளம் பெண்ணை, அவரது ரகசிய காதலனுடன் சேர்த்து கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மாதனஹிப்பரகா கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமந்தா. 26 வயதான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ருஷ்டி என்பவரை திருமணம் செய்தார். இளம் தம்பதி மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவர் மூலம் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
23 வயதான காஜப்பா என்பவர் ஸ்ருஷ்டியிடம் நட்பாக பழகியுள்ளார். நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அது திருமண பந்தத்தை மீறிய உறவாக எல்லை மீறியுள்ளது. இதனால், கணவனின் கண்ணை மறைத்து, தனது ரகசிய காதலனுடன் ஸ்ருஷ்டி உலாவியுள்ளார்.
இந்த நிலையில் தனது கணவர் ஸ்ரீமந்தா வெளியூர் சென்றதும், காஜப்பாவை வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வெளியூருக்கு சென்ற ஸ்ரீமந்தா உடனே வீடு திரும்பியுள்ளார். அப்போது, தனது மனைவி ஸ்ருஷ்டி, காஜப்பாவுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருவரையும் உருட்டுக்கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். அப்படியும், ஆத்திரம் தீராத அவர், இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில், படுகாயமடைந்த ஸ்ருஷ்டி மற்றும் காஜப்பா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இரட்டைக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய ஸ்ரீமந்தாவை வலைவீசி தேடி வருகின்றனர். முறை தவறிய உறவு காரணமாக நிகழ்ந்த இரட்டைக் கொலையால் மாதனஹிப்பரகா கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது.
May 04, 2025 12:06 PM IST
வீடு திரும்பியவுடன் அதிர்ச்சி..! ரகசிய காதலனுடன் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்..! கர்நாடகாவில் சோகம்


