குவாந்தான், ஜனவரி 29:
வீடற்ற முதியவர் ஒருவருக்கு உணவுக் கழிவுகளை வழங்கி, அதை வீடியோ எடுத்து வெளியிட்ட சமூக ஊடகப் பிரபலத்திற்கு (Influencer) நீதிமன்றம் 40,000 ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், ஜோகூர் பாருவில் உள்ள ‘வொங் ஆ பூக்’ (Jalan Wong Ah Fook) சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. 23 வயதான டாங் சீ லுக் (Tang Sie Luk) என்ற அந்த நபர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், மூன்று சிறுவர்கள் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த ஒரு முதியவருக்கு, கோழி எலும்புகள் கலந்த மீதமுள்ள சோற்றை (Scraps) வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கண்டனங்களைப் பெற்றது.
இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், குவாந்தான் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் (CMA) பிரிவு 233(1)(a)-இன் கீழ், பிறரை அவமதிக்கும் வகையிலான உள்ளடக்கத்தைப் பதிவேற்றியதற்காக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
நீதிபதி சாஸ்லினா சாஃபி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு RM40,000 அபராதம் விதித்தார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 4 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். (டாங் அபராதத் தொகையை உடனடியாகச் செலுத்தினார்).




