மக்களுக்கு சுமையை ஏற்படுத்த வியாபாரிகளாகிய நாங்களும் விரும்புவதில்லை என்று மைடின் ஹோல்டிங் பெர்ஹாட் நிறுவனர் டத்தோ வீரா ஹாஜி அமீர் அலி மைடின் தெரிவித்தார். ஆனால் உலகளாவிய பொருளாதார மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் தான் விலை உயர்வு காண்கிறது என்று அவர் தெரிவித்தார். ஆனால் சில பொருட்களின் விலை அதிகரிக்கும்போது குரல் கொடுப்பவர்கள் விலை குறைந்தால் அது குறித்து எதுவும் பேசுவதில்லை என்று பந்தாய் டாலாமில் மைடின் மார்ட் திறப்பு விழாவின் போது உரையாற்றினார்.
நாங்களும் மக்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம். நாடளாவிய நிலையில் மொத்தம் 69 மைடின் கடைகள் இயங்கி வருகின்றன. மைடின் மார்ட் கடை என்று எடுத்து கொண்டால் இது 11ஆவது கடையாகும். எங்கள் பேரங்காடிகளில் பொருட்களில் விலை மிகவும் நியாயமானதாக இருக்கும். பல பொருட்கள் அடக்க விலையை விட நாங்கள் குறைவாக விற்கிறோம். ஏனெனில் சப்ளையர்களிடம் இருந்து எங்களுக்கு கிடைக்கும் விலையில் இருந்து 20 காசு 30 காசு லாபம் வைத்து தான் பொருட்களை விற்கிறோம். இன்றைய மைடின் மார்ட் திறப்பு விழாவில் Mydin Prihatin வழி 50 பேருக்கு உதவிப் பொருட்களை வழங்கி இருக்கிறோம்.


மலேசியர்கள் அனைவருக்கும் நான் விடுக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் அனைவரும் உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவு தாருங்கள் என்பது தான். ஏனெனில் நீங்கள் வாங்கும் பொருட்களின் லாபத்தின் ஒரு பகுதியை நாங்கள் உங்களுக்கு திரும்ப வழங்குகின்றோம் என்றார். மேலும் எங்கள் பேராங்காடியில் விற்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் IKS அங்கீகாரம் பெற்றதாகும். தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்க மைடின் மார்ட் வாங்க என்று டத்தோ வீரா ஹாஜி அமீர் அலி மைடின் கேட்டுக் கொண்டார்.
திறப்பு விழாவில் சிறப்பு வருகை புரிந்து உரையாற்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி பட்சில் மைடின் பேரங்காடி பல காலமாக மக்களுக்கு குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. அதிலும் கோவிட் காலத்தில் அவர்கள் வழங்கிய உதவி பெரும் பாராட்டுக்குரியது என்றார். தற்பொழுதைய காலகட்டத்தில் நாம் அனைவரும் விவேக கைப்பேசியை பயன்படுத்துகிறோம். அதை கொண்டு பொருட்களின் விலைகளை இருந்த இடத்திலேயே அறிந்து கொண்டு நமக்கு எங்கு விலை நியாயமாக இருக்கிறதோ அங்கு பொருட்களை வாங்கி பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


