Last Updated:
ஒரு சிறந்த அணிக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இந்த அணியில் உள்ளன
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்த ஆண்டு உலகக் கோப்பையில் தாராளமாக விளையாடலாம் என முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாடுவதற்கு உடல்தகுதிதான் தேவையே தவிர வயது ஒரு பொருட்டல்ல எனவும் தோனி குறிப்பிட்டுள்ளார். பெரிய போட்டிகளில் களமிறங்கும்போது அனுபவம் மிக்க வீரர்கள் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக இருக்கும் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர். கோலிக்கு 37 வயதும், ரோஹித் சர்மாவுக்கு 38 வயதும் ஆகும் நிலையில் இருவரும் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருடன் ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இருவரின் ஃபிட்னஸ் குறித்து கேள்விகள் எழுந்த நிலையில் இருவரும் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது சதம் அடித்து திறமையை நிரூபித்தனர்.
இந்த நிலையில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய கருத்துக்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன.
விராட் கோலி, ரோஹித் சர்மா குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர், ஏன் அவர்கள் விளையாடக் கூடாது. என்னைப் பொருத்தளவில் வயது என்பது திறமையையும், ஃபிட்னசையும் அளக்கும் அளவுகோல் கிடையாது. மிகப்பெரிய விளையாட்டுகளில் அனுபவம் என்பது மிகவும் தேவையாக இருக்கிறது. 22 வயது வீரராக இருந்தாலும் உடற்தகுதி இல்லையென்றால் அதுதான் பிரச்சனை என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய இந்திய டி20 அணியைப் பற்றி பேசிய தோனி, “இது மிகவும் ஆபத்தான ஒரு அணி. ஒரு சிறந்த அணிக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இந்த அணியில் உள்ளன” என்று நம்பிக்கை தெரிவித்தார். அதே நேரத்தில், ஆசியக் கண்டத்தில் விளையாடும்போது பனிப்பொழிவு ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் எச்சரித்தார்.


