இந்திய அணியில் விராட்கோலி, ரோஹித் சர்மா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியுடன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
2007ஆம் ஆண்டு முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த ரோகித் சர்மா, தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியை பலமுறை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மொத்தம் 159 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா, இந்த ஃபார்மட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். குறிப்பாக, 4231 ரன்களைக் குவித்துள்ள அவர் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல, 5 சதங்கள் அடித்துள்ள ரோகித் சர்மா, அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல்லுடன் சேர்ந்து சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார்.
இதேபோன்று விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடி 4188 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 122 ரன்கள். சராசரி 48.7., இவற்றில் 1 சதமும், 38 அரைச்சதங்களும் அடங்கும்.
369 பவுண்டரியுடன் 124 சிக்சர்களை சர்வதேச டி20 போட்டிகளில் விளாசியுள்ளார். இந்த நிலையில் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை பாராட்டி பேசியுள்ள முன்னாள் கேப்டன் கபில் தேவ், இருவரது இடத்தை எந்த ஃபார்மேட்டிலும் யாராலும் நிரப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் இருவருக்கும் சிறப்பாக ஃபேர்வெல்லை கொடுத்ததாக கூறியுள்ள கபில்தேவ், இருவரும் தோனி, டெண்டுல்கரை போன்றவர்கள் என்றும், அவர்களுக்கு மாற்று வீரர்கள் யாரும் கிடையாது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
