தெலங்கானா மாநிலம் ஜெகத்தியால் மாவட்டம் கொருட்லா பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபாபு. 24 வயதான இவர், மாதாபூர் கிராமத்தை சேர்ந்த 20 வயதான வைஷ்ணவி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதும் திருமணத்துக்கு ஹரிபாபுவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இருந்த போதும் தங்களது காதல் மீது கொண்ட நம்பிக்கையால் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, கணவனுடன் அவரது வீட்டிலேயே வைஷ்ணவி ஒன்றாக வசித்து வந்துள்ளார். ஆனால், அவ்வப்போது கணவன் இல்லாத நேரத்தில் அவரது குடும்பத்தினர் இளம்பெண்ணுக்கு குடைச்சல் கொடுத்துள்ளனர்.
பின்னர், தனது மனைவியை அழைத்துக் கொண்டு மாமனார் வீட்டிலேயே ஹரிபாபு தங்கியுள்ளார். மாமனார் வீட்டில் சுதந்திரமாக இருந்த ஹரிபாபு, அங்கிருந்தே அரசு மருத்துவமனையில் பணியாளர் பணிக்கு சென்று வந்துள்ளார். அதேவேளையில் அவரின் மனைவி ‘வைஷு அம்மா’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் காதல் தம்பதி இருவரும் சேர்ந்து, தங்களது யூடியூப் சேனலை மேம்படுத்த புதுப்புது வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்.
அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்களை யூடியூப்பில் பதிவிட்டு கவனம் ஈர்த்துள்ளனர். 50 ஆயிரம் சப்ஸ்கிரைபர்களை கொண்ட யூடியூப் சேனலில் ஃபாலோயர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக, தங்களுடைய காதல், கல்யாணம், கர்ப்பம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு குடும்ப விஷயங்களையும் காட்சிப்படுத்தி யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
வைஷ்ணவி 4 மாத கர்ப்பமாக இருந்த சூழலில், கணவன் – மனைவி இடையே அண்மைக் காலமாக தகராறு ஏற்பட்டுள்ளது. என்ன காரணம் என்றே தெரியாத அளவிற்கு அடிக்கடி இரவில் பக்கத்து வீட்டுக்காரர்கள் பதறியடித்து எழுந்திருக்கும் அளவிற்கு கத்தி கத்தி சண்டை போட்டுள்ளனர். இந்த நிலையில் இரவில் கணவன் – மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஹரிபாபு, தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.
கர்ப்பிணி என்றும் பாராமல் கத்தியை எடுத்து கழுத்து, தலையில் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்த போது வைஷ்ணவி சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் யூடியூப்பில் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வில்லங்கமான முயற்சியில் ஈடுபட்டதால் ஓர் உயிர் பறிபோனது தெரியவந்துள்ளது.
சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக ஹரிபாபுவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது போல் காட்சிகளை அமைத்து, அவற்றை தங்களது யூடியூப் சேனலில் வைஷ்ணவி பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவால் தன்னுடைய இமேஜ் பாதிக்கப்படுவதாக கூறி மனைவியிடம் ஹரிபாபு சண்டையிட்டுள்ளார். ஆனால், லைக்ஸ் வெறியில் தனது செயலை நியாயப்படுத்தும் வகையில் வைஷ்ணவி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை குத்திக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதனிடையே, இளம்பெண்ணை ஹரிபாபுவின் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமைப்படுத்தியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, யூடியூப் வில்லங்க வீடியோவால் தான் இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வரதட்சணை கொடுமையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தப்பியோடிய ஹரிபாபுவை கைது செய்தால் தான் கொலைக்கான முழு பின்னணியும் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர். யூடியூப்பில் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், தனது காதல் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்ட கர்ப்பிணியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் குலைநடுங்க வைத்துள்ளது.

