லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி ஆகியோர் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 3-வது முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, தரவரிசையில் 116-வது இடத்தில் உள்ள இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவுடன் மோதினார். இதில் எலிசபெட்டா கோசியாரெட்டோ 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.
5-ம் நிலை வீராங்கனையான சீனாவின் குயின்வென் ஹெங் 5-7, 6-4, 1-6 என்ற செட் கணக்கில் 81-ம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் கேத்ரினா சினியகோவாவிடம் வீழ்ந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், சகநாட்டைச் சேர்ந்த 95-ம் நிலை வீரரான லூக்கா நார்டியை எதிர்த்து விளையாடினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-4, 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
11-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-2, 6-2, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் 74-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்டோ கார்பல்ஸ் பனாவை வீழ்த்தினார். 7-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரன்சோ முசெட்டி 2-6, 6-4, 5-7, 1-6 என்ற செட் கணக்கில் 126-ம் நிலை வீரரான ஜார்ஜியாவின் நிகோலோஸ் பாசிலாஷ்விலியிடம் தோல்வி அடைந்தார்.
செய்தித் துளிகள்: உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்ற 29-வது ஆசிய இளையோர் சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் தொடரில் யு-15 மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் திவ்யான்ஷி பவுமிக் 4-2 என்ற கணக்கில் சீனாவின் ஷூ கீஹியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
மகளிர் டி 20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங்கில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா ஓர் இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி வரும் 5-ம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இருந்து இரு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் கணுக்கால் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக போலந்தின் சைப்ரியன் மிர்ஸிக்லோட் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி. 537 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணி 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் கார்பின் போஷ் 5, கோடி யூசுப் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், ஹைதராபாத் நகரின் மையப்பகுதியில் ஜோஹர்பா என்ற பெயரில் உணவகம் திறந்துள்ளார்.