Last Updated:
கடந்த மாதம் தான், மும்பை விமான நிலையத்தில் “போதுமான எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள் இல்லை” என்று கூறி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது.
விமான நிலையத்தில் வீல் சேர் மறுக்கப்பட்டதால் மூதாட்டி ஒருவர் தவறி விழுந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
விமானக் கட்டணங்கள் அதிகரித்து வரும் அதே வேகத்தில், விமான நிலையங்களில் விமானச் சேவைகளும் குறைந்து வருவதாகவும் சிலர் விமர்சித்துள்ளனர். ஏர் இந்தியா விமானங்களில் இருக்கைகள் தொடர்பான தகராறுகள் பல முறை காணப்படுகின்றன.
சில நாட்களுக்கு முன்பு, வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விமான நிறுவனங்களை விமர்சித்து பேபேசியிருந்தார். இந்நிலையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 82 வயது மூதாட்டிக்கு சக்கர நாற்காலி வழங்கப்படாததால், அவர் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது.
இதில் தளர்ந்துபோன அவர் தடுமாறி விழுந்து காயமடைந்தார். இதையடுத்து அவர் ஐசியு வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லி விமான நிலையத்தில், அவர் ஏற்கனவே சக்கர நாற்காலியை முன்பதிவு செய்திருந்தும், ஏர் இந்தியா அவருக்கு சக்கர நாற்காலியை மறுத்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண்ணின் பேத்தி, தனது பாட்டிக்கு முதலுதவி அளிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். சக்கர நாற்காலி வந்த பிறகு, மூதாட்டி இரத்தம் வழியும் உதடு மற்றும் தலை மற்றும் மூக்கில் காயங்களுடன் விமானத்தில் ஏறினார். தனது பாட்டி 2 நாட்களாக ஐ.சி.யூவில் இருப்பதாக அவரது பேத்தி கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் தான், மும்பை விமான நிலையத்தில் “போதுமான எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள் இல்லை” என்று கூறி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது.
பிப்ரவரி 12 அன்று, நியூயார்க்கிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் தனது மனைவியுடன் வந்த 80 வயது பயணி ஒருவர், சக்கர நாற்காலி இல்லாததால் 1.5 கி.மீ தூரம் நடக்க வேண்டியிருந்தது என்று கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் மும்பை விமான நிலையத்தில் மாரடைப்பால் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
March 08, 2025 8:24 PM IST
விமான நிலையத்தில் வீல் சேர் மறுக்கப்பட்டதால் தடுமாறி விழுந்த மூதாட்டி… ஐசியு-வில் தீவிர சிகிச்சை


