விபூதி அல்லது திருநீறு என்பது இந்து மதத்தில் மிக புனிதமானதாக கருதப்படுகிறது. விபூதி என்ற சொல்லுக்கு மகிமை என்று பொருள். அதாவது, அணிந்து கொள்பவருக்கு அளவில்லாத நன்மைகளை தரக் கூடியது தெய்வீக தன்மை நிறைந்தது என்று பொருள். இது இறை வழிபாட்டின் புனித அடையாளமாகவும், தீயசக்திகள் நம்மை நெருங்காமல் நம்மை காக்கும் கவசமாகவும் கருதப்படுகிறது. விபூதி என்பது கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம் என நான்கு வகைகளாக சொல்லப்படுகிறது. சிவ சின்னங்களில் ஒன்றாகவும், சைவ சமயத்தில் மிக உயரிய பிரசாதமாகவும் விபூதி கருதப்படுகிறது.
விபூதி பூசும் போது மூன்று படுக்கை வசக் கோடுகளாகப் பூசுவதே சரியான முறை என சொல்லப்படுகிறது. இதற்கு திரிபுண்டரம் என்று பெயர். பக்தி மார்க்கத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் இந்த முறையில் பூசுவதால் ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். திருநீற்றை ஆள்காட்டி விரலால் தொட்டு பூசுவதை விட நெற்றி முழுவதும் பரவி இருப்பது போல் பூசுவது இன்னும் சிறப்பானதாகும். இதற்கு உத்தூளனம் என்று பெயர். காலை, மாலை பூஜை செய்வதற்கு முன், கோவிலுக்கு செல்வதற்கு முன், இரவு உறங்கச் செல்வதற்கு முன் ஆகிய நேரங்களில் பூசுவது சிறப்பு.

நெற்றியில், இரு புருவங்களுக்கு இடையே, மார்பு, கைகள், தோள்கள் போன்ற இடங்களில் திருநீறு பூசலாம். மார்பு பகுதிக்கு கீழ் உள்ள பகுதிகளில் திருபூசுவதை தவிர்க்க வேண்டும். விபூதி பூசும் போது இறைவனை மனதார நினைத்து பக்தி சிரத்தையுடன் பூச வேண்டும். “ஓம் நமசிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரத்தையோ அல்லது சிவபுராணத்தையும் அல்லது ஏதாவது மந்திரத்தை உச்சரித்த படி பூசுவது சிறப்பு. இதனால் இறை அருள் எப்போதும் நம்முடன் நிலைத்திருக்கும். விபூதியை கீழே சிந்தாமல் பூச வேண்டும். வலது கையில் வாங்கி, இடது கைக்கு மாற்றாமல் சிவ சிவ என ஜபித்தபடி அப்படியே வாங்கி பூச வேண்டும். விபூதியை பேப்பரில் மடிக்காமல் பன்னீர் இலை அல்லது வெற்றிலையில் மடித்து, வீட்டிற்கு எடுத்து வந்து வைப்பதால் அதன் தெய்வீக தன்மை குறையாமல் அப்படியே வீட்டில் நிலைத்திருக்கும்.
விபூதி பூசும் விரல்களும் பலன்களும்:
* கட்டை விரல் – கட்டை விரலால் விபூதியை தொட்டு பூசினால் தீராத வியாதி ஏற்படும்.
* ஆள்காட்டி விரல் – ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு பூசினால் பொருள் இழப்பு, வீண் செலவு, நாசம் ஏற்படும்.
* நடுவிரல் – நடுவிரலால் விபூதியை தொட்டு பூசினால் வாழ்க்கையில் நிம்மதியின்மை ஏற்படும்.
* மோதிர விரல் – மோதிர விரலால் விபூதியை தொட்டு பூசினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.
* மோதிர விரலும், கட்டை விரலும் – இந்த இரண்டு விரங்களையும் சேர்த்து விபூதியை பூசினால் உலகமே வசப்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.




