கோத்தா கினாபாலு:
இரு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில், தப்பிப்பிழைத்த ஆடவர், தனது காரில் இருந்து இறங்கி சாலையில் நின்றபோது, வேறோரு கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று (ஜூன் 16) இரவு 12.30 மணியளவில் லாகாட் டத்து – சண்டாக்கான் சாலையில் நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்ட 38 வயது ஆடவர், 30 வயதுப் பயணியுடன் லகாட் டத்துவிலிருந்து சண்டாக்கான் நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக லகாட் டத்து மாவட்டக் காவல்துறை தலைவர் ஆணையர் ஸுல்பகரின் இஸ்மாயில் தெரிவித்தார்.
கார் ஓட்டி வந்தபோது, அந்த ஆடவரின் கார் சாலையில் வழுக்கியபடி எதிர்த்தடத்திற்குச் சென்றதாகவும், அப்போது எதிர்த்திசையில் 49 வயது ஆடவர் ஓட்டி வந்த கார்மீது மோதியதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து, அந்த 38 வயது ஆடவரும் அவரது காரில் இருந்த பயணியும் காரைவிட்டு இறங்கினர்.
“அந்த 38 வயது ஆடவர் சாலையின் நடுவில் நின்றிருந்த நிலையில், சண்டாக்கான் நோக்கிச் சென்ற இன்னொரு கார் அவர்மீது மோதியது,” என்று ஸுல்பகரின் விவரித்தார்.
படுகாயமடைந்த அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைச் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இவ்விபத்தில் வேறு எவரும் காயமடையவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் மது அருந்திவிட்டு கார் ஓட்டினரா என்பதைக் கண்டறிவதற்காக, குறித்த ஆபவர் ஓட்டிய காரில் பயணம் செய்தவர், மற்ற இரு கார்களின் ஓட்டுநர்கள் ஆகியோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


