Last Updated:
இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த மனைவி சுமா, கணவனை கொன்று விட்ட காப்பீட்டுப் பணமான 2 கோடி ரூபாயை சுருட்ட திட்டம் போட்டிருக்கிறார்
கர்நாடகா மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர் 46 வயதான சந்தீப். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவரது மனைவி பெயர் சுமா. சந்தீப் ராணுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சுமாவுக்கு அதே பகுதியை சேர்ந்த நபருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
கணவனுக்குத் தெரியாமல் காதலைத்தொடர்ந்து வந்த சுமா, கணவன் இல்லாத போதெல்லாம் அந்த நபருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். சந்தீப் தனது பெயரில் 2 கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுத்து இருந்தார்.
இந்த நிலையில், சந்தீப் கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி ஒரு பைக் விபத்தில் சிக்கினார். அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதித்திருந்தனர்.
இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த மனைவி சுமா, கணவனை கொன்று விட்ட காப்பீட்டுப் பணமான 2 கோடி ரூபாயை சுருட்ட திட்டம் போட்டிருக்கிறார். அதற்காக கடந்த மார்ச் 15ம் தேதி காதலனுடன் சேர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கணவருக்கு சலைன் பாட்டில் மூலம் விஷத்தை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சந்தீப் பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கணவர் இறந்து விட்டதாக உறவினர்களை அழுது நம்ப வைத்த சுமா, உயிரிழந்த கணவனுக்கு இறுதி சடங்குகளை செய்தார். பின்னர் காப்பீட்டு தொகையை பெறுவதற்காக போலியான ஆவணங்களை தயார் செய்து காப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பித்தார்.
அவருக்கு ஆதரவாக மருத்துவ ஊழியர்கள் மட்டுமின்றி, அரசு அதிகாரிகள் கூட போலியான ஆவணங்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த சந்தீப்பின் சகோதரிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நன்றாக தேறி வந்த நபர் எப்படி உடனே உயிரிழக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
தனது சகோதரனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரைப் பெற்ற போலீசார் சுமாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவருக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஏமாற்ற மருத்துவ மற்றும் ஆய்வக ஊழியர்களும் சேர்ந்து மாரடைப்பு என ஆவணங்களை தயார் செய்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் சுமாவின் காதலன், மற்றும் அவருக்கு போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்தவர்கள் என 9 பேரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Jun 16, 2026 10:44 PM IST


