மாநிலம் வாரியாக சென்று 200 பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்தும், 17 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி மாஸ் காட்டி வருகிறார், தஞ்சாவூரை சேர்ந்த இளைய விவசாயி இளந்திரையன். இவரின் சாதனை விவசாயம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..
தஞ்சாவூர் மாவட்டம் நெடார் கிராமத்தைச் சேர்ந்தவர் இளந்திரையன். இவர் படித்தது எம்.காம். எம்.பில்., பி.எட். சில ஆண்டுகள் தனியார் துறையில் வேலை பார்த்தும் மனதிற்கு திருப்தியில்லை. இந்த நிலையில் இனி பாரம்பரிய நெல் ரகங்கங்களை கொண்டு இயற்கை விவசாயம் செய்யலாம் என முடிவெடுத்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 குழிகளில் ( ஒரு மா) ஆரம்பித்த சாகுபடி இன்று 17 ஏக்கரில் பிரமாண்ட இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அதுவும் முழுக்க முழுக்க நம் பாரம்பரிய நெல் ரகங்கள் தான். பல மாநிலங்களில் தேடி தேடி சேமித்து தற்போது 200 பாரம்பரிய நெல் ரகங்களை சேமித்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில ரகங்களை சாகுபடி செய்து அதன் மகத்தான் நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்.
இவரை பற்றி தெரிந்ததும் அவரை பார்க்க சென்ற போது வயல் வேலைகளை செய்து கொண்டிருந்தார். தனது தந்தை தர்மராஜன் விவசாய சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என கூறும் இளந்திரையன், தன்னுடைய பள்ளி காலங்களில் இருந்தே விவசாயத்தின் மேல் தந்தை கொண்டிருந்த பற்று தனக்கும் மனதில் பதிய ஆரம்பித்தது என தெரிவித்தார். வீட்டிற்கு வந்தால் விவசாயம் என்றும் வெளியில் போனால் படிப்பு என கல்லூரி வரை தனது வாழ்க்கை இப்படியே சென்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பாரம்பரிய விதை சேகரிப்பில் ஆர்வம் காட்டினேன் எனவும் இளந்திரையன் தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: UPSC தேர்வர்களுக்கு மாதம் ₹ 7500 உதவி தொகை… பயன்பெறுவது எப்படி?
உடலுக்கு ஆரோக்கியமான வலிமையைத் தரும் நெல் ரகங்களை அடுத்த தலைமுறையை கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பியதால் இனி இயற்கை விவசாயம் தான் எனது வாழ்க்கை முடிவெடுத்தேன் என இளந்திரையன் தெரிவித்தார். நம் தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் ஒடிசா, கர்நாடகா என பிற மாநிலங்களுக்கும் பயணம் செய்து அங்குள்ள விவசாயிகளிடம் பேசினேன். இப்படி எனது தேடுதல்கள் பயனாக இப்போது என்னிடம் 200க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரக விதைகள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய போது, 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 குழியில் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன் என்றும், தற்போது 17 ஏக்கரில் முழுமையாக இயற்கை வழி விவசாயம், அதுவும் நம் பராம்பரிய நெல் வகைகள் மட்டுமே சாகுபடி செய்கிறேன் என இளந்திரையன் தெரிவித்தார்.சித்த சன்னா, செம்புலிகார், வெள்ளை பூங்கார், சாக்கோ பைற்றான், மடுமுழங்கி, தீ கார், சண்டிகார், மனக்கத்தை, கல்லுடையான்,பால்குட வாழை, செம்புலி சம்பா, கருங்குறுவை, வைகரை சம்பா, வாடன் சம்பா, ராமகளி, சொர்ண மயூரி, கொச்சின் சம்பா, ஆற்காடு கிச்சடி, வைகுண்டா, யானை கொம்பன், பனகாட்டு குடவாழை, நாட்டு பாஸ்மதி,சூர குறுவை, கம்பன் சம்பா, காலாபாத், வாளான் சம்பா, பத்ரா, மொட்டகூர், கோவிந்த போக், வெள்ளை பொன்னி, குழி அடிச்சான், கொத்தமல்லி சம்பா, மைசூர் மல்லி, இந்திராணி என்று சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி 200க்கு அதிகமான பாரம்பரிய நெல் ரக விதைகள் தன்னிடம்இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாரம்பரிய அரிசிகளின் மருத்துவ குணங்கள்:
பனங்காட்டு குடவாழை அரிசி தொழிலாளர்களின் தோழன் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நோய் எதிர்ப்பும், உடல் வலிமையையும் தரும். கருடன் சம்பா நோய் எதிர்ப்பு சக்தி தரும். சாப்பாடு மற்றும் பலகார அரிசி. கருங்குறுவை அரிசி நெல் கரு நிறமாக இருக்கும். உடலை வலுவாக்கும் காயகல்ப சக்தி கொண்டது. இந்த அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஊறவைத்து ஆறுமாதம் கழித்து எடுத்தால் பால் போல் இருக்கும்.
இதற்கு ‘அன்ன காடி ‘என்று பெயர். இது காலராவிற்கான மருந்து என்பதும் குறிப்பிடத்தக்கது. கார் அரிசி சர்க்கரை நோய்க்கும், வாதம் சம்பந்தமான நோய்க்கும், கரப்பான்களுக்கும் மருந்தாகும். அரிசி செந்நிறம் இது ஒரு மாமருந்து. இந்த அரிசியுடன் மூலிகை மருந்து சேர்த்தால் லேகியம் செய்ய முடியும் எனவும்து யானைக்கால் நோய்க்கான மருந்து என்றும் இளந்திரையன் தெரிவித்தார்.
இலுப்பைப்பூ சம்பா அரிசி சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். பூங்கார் அரிசி மகப்பேறு காலங்களில் உண்ண வேண்டிய அரிசி. தாய்பால் சுரக்கும். கட்ட சம்பா அரிசி நோய் எதிர்ப்பு சக்தி தரும். சிங்கினி கார் அரிசி எல்லா விதமான நோயாளிகளும் உண்ண வேண்டிய அரிசி. உடல் நலம் பெற உதவும்.
சூரகுருவை அரிசி நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக தரும். மூட்டு வலி, பக்க வாதம் போன்ற நோய்க்கான மருந்து. நரம்பு பிரச்சனையின் மருந்து. காட்டுயானம் அரிசி இந்த அரிசியில் கஞ்சி வைத்து கறிவேப்பிலை போட்டு மூடி வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்தால் புற்றுநோயால் ஏற்படும் புண்கள் ஆறும் என்றும் இளந்திரையன் கூறினார்.
இப்படி சாகுபடி செய்த நெல் ரகங்களில் தேவையான அளவு விதை நெல்லாக சேகரிக்க ஆரம்பித்தேன். மீதம் இருந்தவற்றை அரிசியாக்கி நானே விற்பனை செய்ய தொடங்கினேன். மேலும் விதை நெல்லை இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு வழங்கினேன். மேலும் குறுவை, சம்பா சாகுபடிக்கு ஒரே ரகங்களை பயன்படுத்தாமல் என்னிடம் இருந்த பல ரகங்களை மாற்றி மாற்றி சாகுபடி செய்தேன். 100 குழியில் இருந்து ஒரு ஏக்கர், 3 ஏக்கர் என்று வளர்ந்தது. முக்கியமாக ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ரகங்களை சாகுபடி செய்து அதிகளவில் விதை நெல்லை சேர்க்க ஆரம்பித்தேன். இப்படி நெல் விதைகளை சேகரிக்கவே என்று 10க்கும் அதிகமான குதிர்களை வைத்துள்ளேன். அவற்றில் நம் பாரம்பரிய நெல் ரகங்கள் மட்டுமே உள்ளது.
தற்போது17 ஏக்கரில் முழுமையாக இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வருகிறேன். தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப சமூக வலைதளங்களில் நான் சாகுபடி செய்வதை பதிவிட்டு அரிசி ரகங்கள், அதையும் மதிப்புக்கூட்டி அவல் என்று சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர், தஞ்சை, மதுரை, திருநெல்வேலி என பல மாவட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறேன் என இளந்திரையன் பெருமிதம் தெரிவித்தார். தற்போது 17 ஏக்கரில் சொர்ண மசூரி, சித்தசன்னா, இந்திராணி, கந்தசாலா, பூங்கார், குள்ளகார், அறுபதாம் குறுவை, கருத்தகார், கருங்குறுவை உள்ளிட்ட 13 ரகத்தை சாகுபடி செய்துள்ளதாக இளந்திரையன் தெரிவித்தார்.
இயற்கை விவசாயத்தில் மதிப்பு கூட்டப்பட்டு அரிசி, அவல் போன்றவை விற்பனை மற்றும் விதை நெல் விற்பனை ஆகியவை மூலம் வருடத்திற்கு ரூ. 6 லட்சம் வரை வருமானம் வருவதாக இளந்திரையன் தெரிவித்தார். ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவு என்பதே தனக்கு அதிகமான ஒன்றுதான் என்றும், செலவை குறைத்து மகசூலை அதிகரிப்பதுதான் தனது விருப்பம்.
என்று இளந்திரையன் கூறினார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
