கடந்த 2012-ம் ஆண்டுவாக்கில் அதே கிராமத்தை சேர்ந்த ராமுலு என்பவர் உடன் பார்வதம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த கணவர் சந்திரய்யா கண்டித்துள்ளார். அதனால் ஆத்திரம் கொண்ட பார்வதம்மா, தனது ரகசிய காதலன் ராமலுவுடன் சேர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு கணவனை கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் ராமலு – பார்வதம்மா இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை சென்று வெளியே வந்ததும் இருவரின் ரகசிய உறவு தொடர்ந்துள்ளது. அதற்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பின்னர், இருவரும் ஊரை விட்டுச் சென்று கர்னூல் நகரில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். வேலை செய்த இடத்தில் ராமுலுவுக்கு லட்சுமி என்ற மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதை அறிந்த பார்வதம்மா லட்சுமியுடன் நாள்தோறும் சண்டையிட்டுள்ளார்.
மேலும் உன்னை நம்பி குடும்பத்தை விட்டு வந்த தனக்கு துரோகம் செய்வியா என்று ராமுலுவுடனும் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ராமலுவை கட்டுப்படுத்த முடியாது என உணர்ந்த பார்வதம்மா, அவரது பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனால், பார்வதம்மாவை கொலை செய்ய ராமலுவும், அவரின் புது காதலி லட்சுமியும் சதித் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த 25 ஆம் தேதி இரவு மது பாட்டில் மற்றும் கத்தியை வாங்கிக் கொண்ட ராமுலு வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர், பார்வதம்மாவை இருசக்கர வாகனத்தில் ஏற்றி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தயாராக இருந்த லட்சுமியுடன் சேர்ந்து பார்வதம்மாவை கட்டையால் தாக்கியுள்ளார்.
அதில் சரிந்து விழுந்தவரை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். அப்போது பார்வதம்மா அணிந்திருந்த கொலுசு, கம்மல் உள்ளிட்ட நகைகளை லட்சுமி எடுத்துள்ளார். பின்னர் உடலை அருகில் உள்ள வயலில் இருந்த மக்காச்சோள குப்பையில் போட்டு தீ வைத்துள்ளனர். மறுநாள் காலையில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கிடந்தது தொடர்பாக விவசாயிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீசைலம் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், ராமலுவும், லட்சுமியும் சேர்ந்து பார்வதம்மாவை கொலை செய்து உடலை எரித்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முறை தவறிய உறவுக்கு தடையாக இருந்த கணவனை 10 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்த மனைவியை, அவரின் ரகசிய காதலனே மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து கொன்று எரித்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

