Last Updated:
இந்த தொடரில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களான மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டோன் மீது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான வீரேந்தர் சேவாக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அவரது கருத்துக்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் குறைந்தது 7 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இதில் தலா 10 புள்ளிகளுடன் முதல் 5 இடங்களில் குஜராத், டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணிகளுக்கும் மீதம் 6 முதல் 7 போட்டிகள் இருக்கிறது.
இந்த தொடரில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல், பெங்களூரு அணியின் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அவர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை அணி நிர்வாகம் அளித்த போதிலும் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இருவர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த வீரேந்தர் சேவாக், ”அவர்கள் விடுமுறை நாட்களை கழிப்பதை போன்று ஐபிஎல் தொடருக்கு வருகிறார்கள். இங்கு சந்தோஷமாக இருந்துவிட்டு பின்னர் தங்களது நாடுகளுக்கு திரும்பிச் செல்கின்றனர்.
தங்களை ஏலத்தில் எடுத்த அணிகளுக்காக போராடி வெற்றியை கொடுக்க வேண்டும் என்கிற ஆசை அவர்களுக்கு இல்லை. நான் நிறைய வீரர்களுடன் பழகி உள்ளேன். சிலர் மட்டும் தான் எனக்கு இதுபோன்ற உணர்வை கொடுப்பார்கள்” என்று கூறியுள்ளார். அவரது கருத்து கிரிக்கெட் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் மொத்தமே 41 ரன்களும், 4 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். லிவிங்ஸ்டோன் மொத்தமே 87 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். லிவிங்ஸ்டோனை ஆர்சிபி ரூ. 8.75 கோடிக்கும், மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணி ரூ. 4.20 கோடிக்கும் ஏலத்தில் எடுத்திருந்தது கவனிக்கத்தக்கது.
April 21, 2025 4:18 PM IST


