36
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் துறைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அடித்தளம் இடப்பட்டிருப்பதாக இந்தியாவின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை இராஜாங்க அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கென உறுதியானதும் மூலோபாய பார்வை கொண்டதுமான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதோடு, விண்வெளி ஸ்டாட்அப் திட்டங்களில் உயிரியல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தவென ஆயிரம் கோடி ரூபா மூலதன நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நிதி, இந்தியாவின் வளர்ந்து வரும் 300 விண்வெளி ஸ்டார்ட்அப் கருத்திட்டங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, இம்முன்முயற்சிகள் இந்தியாவின் அறிவியல் திறனை மேம்படுத்துவதோடு, கைத்தொழில் மற்றும் வளங்களில் உலகளாவிய மாற்றங்களுக்கும் வித்திடும். அத்தோடு நிலைபேறானதும் தன்னிறைவானதுமான பொருளாதாரத்திற்கும் பங்களிக்கும்.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் நாம் பாரிய சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம். வானிலை, உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற முக்கிய துறைகளில் இந்தியாவின் தலைமைத்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விண்வெளித் துறையில் கடந்த சில வருடங்களுக்குள் பாரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ள இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும்.
சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரியல் தொழில்நுட்பம் என்பவற்றை உள்ளடக்கிய கொள்கையானது, இறக்குமதியில் சார்ந்திருப்பதைக் குறைப்பதோடு வளங்களில் தன்னிறைவை உருவாக்கவும் துணைபுரியும் என்றுள்ளார்.

&w=1200&resize=1200,675&ssl=1)