தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா. இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக தங்களுடைய காதலை அறிவிக்காமல் மறைத்து வந்தனர். இருந்தாலும் இவர்களின் காதல் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தது.
சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் திருமணம் செய்து கொள்ள உள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தங்கள் திருமணத்துக்கு The Wedding of ViRosh என்று பெயரிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ViRosh என்பது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகிய பெயர்களின் சுருக்கமாக ரசிகர்கள் தங்களுக்கு சூட்டியதால் அதை பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு மார்ச் 4-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை 10.10 மணிக்கு உதய்பூரில் உள்ள ஐடிசி மொமண்ட்ஸ் ஹோட்டலில் விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா இருவரது திருமணமும் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் இருவரும் சில நெருங்கிய நட்சத்திரங்களுக்கு மட்டுமே தங்களது திருமணத்துக்கு அழைப்பு கொடுத்துள்ளனர். அந்த வகையில் பிரபல மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இவர்களது திருமணத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிகிறது. அதிகாரப்பூர்வ விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமண புகைப்படங்களுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி திருமண வாழ்த்து கடிதத்தை விஜய் தேவரகொண்டாவின் பெற்றோருக்கு அனுப்பியுள்ளார். அதில் “திரைக்கதைகளை விட அழகான ஒரு வாழ்க்கைப் பயணத்தை விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா தம்பதி தொடங்க உள்ளனர். அவர்களின் புதிய வாழ்க்கை அத்தியாயம், திரையில் உருவாக்கிய மாயாஜாலத்தை விடச் சிறப்பாக அமையும். அவர்களுக்கு அன்பும் மகிழ்ச்சியும் நிறையட்டும்” என்று கூறியுள்ளார்.




