வரலாற்றின் பக்கங்கள் எப்போதுமே அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களை போலவே, அந்த உச்சியிலிருந்து கீழே தள்ளப்பட்டவர்களை பற்றியும் அதிகம் பேசுகின்றன. எந்த ஒரு பேரரசின் வீழ்ச்சியும் அதன் அடித்தளத்திலிருந்தே தொடங்குகிறது.
நம்பிக்கை “போர் வீரனாக’…
1950-ல் ஒரு செல்வாக்கு மிக்க ராணுவக் குடும்பத்தில் பிறந்த ஜாங்கிற்கு, அதிகாரம் என்பது பிறப்பிலேயே கொடுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இவரது தந்தை ஜாங் ஜாங்ஸுன், மாவோவின் நம்பிக்கைக்குரிய தளபதி. அதே காலகட்டத்தில், தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங்கின் தந்தையும் அதே ராணுவப் பிரிவில் பணியாற்றியவர்.
ஒரு சாதாரண வீரராக ராணுவத்தில் சேர்ந்த ஜாங், வெறும் வாரிசுப் பெருமையால் மட்டும் உயரவில்லை; 1979-ல் வியட்நாம் போர்க்களத்தில் அவர் சிந்திய ரத்தமும், காட்டிய வீரமுமே அவரை ஒரு நிஜமான ‘போர் வீரனாக’ ராணுவத்தின் முன்னணியில் நிறுத்தியது.
ராணுவ பதவி – விசுவாசத்தின் அடையாளம்
2012-ஆம் ஆண்டு சீன அரசியலில் ஒரு திருப்புமுனை. ஜி ஜின்பிங் சீனாவின் அதிபராகப் பொறுப்பேற்றபோது, ராணுவத்தைத் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் துடித்தார். அதற்கு அவருக்கு ஒரு நம்பிக்கையான போர் வீரன் தேவைப்பட்டான். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தவர் ஜாங் யூக்ஸியா. ஜாங்கின் மீது ஜி ஜின்பிங் கொண்ட அபார நம்பிக்கையினால், அவர் மத்திய ராணுவ ஆணையத்தின் (CMC) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இது ராணுவத்தில் அதிபருக்கு அடுத்தபடியாக ஒருவருக்குக் கிடைக்கும் மிக உயரிய பதவி. சீனாவின் அணு ஆயுதப் பிரிவை (Rocket Force) நவீனப்படுத்துவது முதல், அதிநவீன ஏவுகணைகளை வாங்குவது வரை அனைத்து ரகசியப் பொறுப்புகளும் ஜாங்கிடமே ஒப்படைக்கப்பட்டன. ராணுவ விதிகளின்படி 72 வயதில் ஓய்வு பெற வேண்டிய ஜாங்கிற்கு, ஜி ஜின்பிங் விதியைத் தளர்த்தி 75 வயது வரை பதவி நீட்டிப்பு வழங்கினார். அந்த அளவிற்கு அவர் விசுவாசத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டார்.

