Tamilnadu
oi-Velmurugan P
சென்னை: விளையாட்டு என்பது நமது பள்ளிகளில் இருந்து தொடங்கப்பட வேண்டும். தற்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு வாரத்திற்கும் இரண்டு பிடி (விளையாட்டு பீரியட்கள்) வகுப்புகள் மட்டுமே உள்ளன. இந்த நிலை மாற்றப்பட்டு, பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செயல்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் மரியா வில்சன் கூறினார்.
நிதியமைச்சர் மரியா வில்சன் விளையாட்டு துறை குறித்து பேசும் போது, “அனைவருக்கும் விளையாட்டு, அனைத்து இடங்களிலும் விளையாட்டு, நமது கல்வி நிறுவனங்கள் பாதுகாப்பானதாகவும், போதைப்பொருள் இன்றியும் திகழும்.. ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதை நோக்கமாக கொண்டு, சர்வதேச அளவில் தமிழ்நாட்டை உச்சத்திற்கு கொண்டு செல்ல நமது அரசு உறுதி பூண்டுள்ளது. சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக 10 சிறப்பு ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டு இதற்காக 50 கோடி ரூபாய் நிதியுதவி செய்யப்படுகிறது. விளையாட்டில் ஆர்வம், திறமையும் கொண்ட 8 வயது முதல் 12 வயது வரை உள்ள இளம் பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் 500 வீரர்களுக்கு கூடுதலாக 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு கிராமிய விளையாட்டுகளை பல்வேறு இடங்களை நடத்த 42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோல் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த வெற்றியாளர்களை உருவாக்குதல், இளைஞர்களுக்கு இடையே ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதியை காக்கும் பண்பாட்டை வளர்த்தல் ஆகிய இருமுனைகளின் மூலம் தான் உண்மையான விளையாட்டு வளர்ச்சியை அடைய முடியும்.
விளையாட்டு என்பது நமது பள்ளிகளில் இருந்து தொடங்கப்பட வேண்டும். தற்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு வாரத்திற்கும் இரண்டு பிடி (விளையாட்டு பீரியட்கள்) வகுப்புகள் மட்டுமே உள்ளன. இந்த நிலை மாற்றப்பட்டு, பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செயல்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த திட்டத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவோம். அனைத்து விளையாட்டு உபகரணங்களும் அரசு பள்ளி, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும். இந்த விளையாட்டு பயிற்சி, சிந்தனை திறன், ஒழுக்க மேம்பாட்டை வளர்ப்பதுடன் சர்வதேச அளவில் சாதனை படைக்கும் திறமையுடையவர்களை அடையாளம் கண்டறிவதற்கு வழிவகுக்கும்.
விளையாட்டை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதற்காக ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகர்புற உள்ளாட்சிகளில் சிறிய உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு மையங்கள் உருவாக்கப்படும். இளையதலைமுறையினர் தங்கள் இல்லம் அமைந்துள்ள பகுதிகளிலேயே விளையாடுவதற்கான வசதிகள் அமைக்கப்படும். இதன் மூலம் ஆரோக்கியமான, ஒழுக்கமான சுறுசுறுப்பான தலைமுறையை நாம் உருவாக்குவோம். இந்த திருத்தப்பட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறைக்கு 1051 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது” இவ்வாறு கூறினார்.



