Last Updated:
ரஷ்யா அரசு Max செயலியை ஊக்குவிக்க வாட்ஸ் ஆப் கணக்குகளை முடக்கியதாக Meta குற்றம் சாட்டியது. Pavel Durov டெலிகிராம் கட்டுப்பாடு குறித்தும் தெரிவித்தார்.
ரஷ்யாவில் அரசு செயலியை ஊக்குவிப்பதற்காக, வாட்ஸ் ஆப் கணக்குகளை முடக்க அந்நாட்டு அரசு முயற்சித்ததாக மெட்டா நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
ரஷ்யாவில் வாட்ஸ் ஆப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு மாற்றாக “மேக்ஸ்” என்ற தகவல் பரிமாற்ற செயலியை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதுடன் அரசு ஆவணங்களையும் சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.
இந்நிலையில், ரஷ்யாவில் சுமார் 10 கோடி பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் திடீரென்று முடங்கியதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மெட்டா நிறுவனம், ரஷ்யர்களின் வாட்ஸ் ஆப் கணக்குகளை முடக்க அந்நாட்டு அரசு முயற்சித்ததாக குற்றம்சாட்டியுள்ளது.
அரசு செயலியான “மேக்ஸ்” மக்களின் தனியுரிமை பாதுகாப்பில் சமரசம் செய்வதற்கு வழிவகுக்கும் என்றும் வாட்ஸ் ஆப் குற்றம்சாட்டியுள்ளது. இதேபோன்று, டெலிகிராம் செயலியையும் கட்டுப்படுத்த ரஷ்ய அரசு முயற்சிப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி பாவல் துரோவ் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள ரஷ்ய அரசு, நாட்டின் விதிகளை வாட்ஸ் ஆப், டெலிகிராம் உள்ளிட்டவை பின்பற்றவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று எச்சரித்துள்ளது.


