Last Updated:
போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில், தற்போது பட்னி சாவுகளும் தொடர்கதையாகி வருகின்றன.
காசாவில் நிலவும் உணவுப் பஞ்சத்தின் தீவிரத்தை உலகுக்கு உணர்த்தும் காட்சிகள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 21 மாதங்களாகப் போர் நீடித்து வருகிறது. இந்தப் போரால் காசா பகுதியில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் படைகளின் தொடர் முற்றுகையால் காசா முழுவதும் உணவு மற்றும் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
உலக நாடுகளின் உதவிப் பொருட்களைக் குறைந்த அளவிலேயே காசாவுக்குள் இஸ்ரேல் அனுமதித்து வருகிறது. நாளொன்றுக்கு 600 டிரக்குகளில் நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் சூழலில் 5 டிரக்குகள் மட்டுமே காசா நகருக்குள் அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், காசா முழுவதும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு வேளை உணவுக்கே மக்கள் போராடும் அவலம் நிலவுகிறது.
போரினால் மட்டுமின்றி போதிய உணவு கிடைக்காமல் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். இதனால், பட்டினியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. பட்டினிச் சாவால் இறந்தவர்களில் 80 பேர் குழந்தைகள் என்று காசா சுகாதாரத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.
காசா நகரில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளும், பெண்களும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காசாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பல நாட்கள் சாப்பிடாமல் உள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் இதனைப் பஞ்சமாக அறிவிக்கவில்லை. இதற்கு, ஐ.நா. அமைப்பின் சில அளவுகோல்களே காரணம் என்று கூறப்படுகிறது. குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்து வரும் சூழலில் காசாவில் உணவுப் பொருள் விநியோகத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
July 24, 2025 8:03 AM IST


