Last Updated:
மேற்கு வங்க சட்டப்பேரவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது, ஃபால்டாவில் பா.ஜ.க வேட்பாளர் பட்டனில் டேப் ஒட்டிய சர்ச்சை, உறுதியானால் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் ‘டேப் ஒட்டியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில், 152 தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். முதற்கட்ட தேர்தலில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 1.64 கோடி ஆண்களும், 1.57 கோடி பெண்களும் அடங்குவர். மொத்தம் 41,001 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணையவழி நேரடி ஒளிபரப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
திரிணமுல் காங்கிரஸின் தற்போதைய அமைச்சர்கள், சந்திரிமா பட்டாச்சார்யா, பிரத்யா பாசு, சுஜித் போஸ், அகில் கிரி, புலக் ராய் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களின் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வட 24 பர்கானா மாவட்டத்தின் முக்கிய தொகுதியான பனிஹதியில், ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ரத்னா தேவ்நாத் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். திரிணமுல் காங்கிரஸின் சட்டமன்றக் குழுத் தலைவர் நிர்மல் கோஷ், ரத்னா தேவ்நாத்தை எதிர்த்து களம் காண்கிறார்.
அரசியல் ரீதியாக மிக முக்கியமான நந்திகிராம் தொகுதியில், பா.ஜ.க-வின் சுவேந்து அதிகாரி மீண்டும் போட்டியிடுகிறார். 2021 தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இம்முறை, பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடும் நிலையில் அங்கும் சுவேந்து அதிகாரி களம் காண்கிறார்.
தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது போல், சுவேந்து அதிகாரியும் இரண்டு இடங்களில் களம் காண்கிறார். நந்திகிராமில், பவித்ரா கர் என்பவரை திரிணமுல் காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் கிருஷ்ணாநகர், சாந்திபூர், கயாட்டா, மற்றும் டம் டம் ஆகிய தொகுதிகள் நட்சத்திரத் அந்தஸ்து பெற்றவை.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தில் ‘டேப் ஒட்டியதால் சர்ச்சை எழுந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஃபால்டாவில் வாக்கு இயந்திரத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க முடியாதபடி இயந்திரத்தின் பட்டனில் ‘டேப்’ ஒட்டியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் டேப் ஒட்டியது உறுதியானால் அந்த வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்தப்படும் என்றும், விசாரணைக்குப் பிறகு மறு தேர்தல் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திர பட்டனில் ஒட்டப்பட்டிருந்த டேப்.. மேற்கு வங்க தேர்தலில் வெடித்த புதிய சர்ச்சை.. என்ன நடந்தது?


