தலவாக்கலை – லிந்துலை பிரதான வீதியில் அமைந்துள்ள லிந்துலை நகர்ப் பகுதியில், இன்று (28) அதிகாலை சுமார் 4:30 மணியளவில் வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது கப் வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றுள்ளது.
இந்த விபத்தில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, சிறிய ரக வேன் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
மஹிந்திரா ‘Bolero’ ரக கப் வாகனம் குறித்த வாகனங்கள் மீது மோதிய பின்னரும், அதன் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய கப் வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கண்காணிப்புக் கமெராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தப்பிச் சென்ற கப் வாகனத்தையும் அதன் சாரதியையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர். எஃப். எம். சுஹைல்

