வவுணதீவு இருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 வயது குழந்தையுடன் நேற்று வியாழக்கிழமை சென்று காணாமல் போன இளம் தாய் ஒருவர் தாந்தாமலை நெல்லிகாடு வயல்
பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, அதே கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மீட்பு நடவடிக்கை
வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள கொத்தியாவலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் தாய் ஒருவர் அவரது 2 அரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட காச்சலுக்கு மருந்து எடுப்பதற்காக நேற்று வியாழக்கிழமை காலையில் வீட்டில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு புறப்பட்ட நிலையில், இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரை தேடிவந்ததுடன் வவுணதீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று(20) வெள்ளிக்கிழமை காலை கொக்கட்டிச்சோலை காவல்பிரிவிலுள்ள தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில்; மாட்டுபட்டியில் பால்
எடுப்பதற்காக சிலர் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.
அதனைதொடர்ந்து, அங்கு சென்று பார்த்தபோது பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டு பெண் மீட்கப்பட்ட போது அவர், கிணற்றில் அழுகிய நிலையில் சடலங்கள் இருப்பதாக தெரிவித்த நிலையில் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதேவேளை, அவருடன் வந்த குறித்த குழந்தை கொத்தியாவலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வயல் பகுதியில் கைவிடப்பட்டு அழுது கொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அழுகிய சடலம்
இதனை தொடர்ந்து காவல்துறை நீதிமன்ற அனுமதியை பெற்று தடவியல் பிரிவு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த சுமார் 20 வயதுக்கு
உட்பட்ட பெண் ஒருவரின் சடலம் ஒன்றை மீட்டு பிரேத பரிசோதணைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்தனர்.

இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அவர் பெரும் அதிர்சியடைந்து பயந்த நிலையில் இருந்து வருவதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த இளம் தாய் கடத்தப்பட்டாரா? கொள்ளையர்கள் வாகனத்தில் கடத்தி சென்றனரா? தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா? என பல கோணத்தில் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, காவல்துறை மாவட்ட புலனாய்வு பிரிவினர், விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம், கடந்த மாதம் வெல்லாவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் காணாமல் போன பெண்ணுடையதாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

