India
oi-Vishnupriya R
மூணாறு: கொழுக்குமலையில் 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை இளைஞரை 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூணாறு அருகே தமிழக – கேரள எல்லையில் கொழுக்குமலை உள்ளது. இது சுமார் 7900 உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு உலகிலேயே அதிக உயரத்தில் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது.

இங்கு மேகக் கூட்டங்களுக்கு இடையே காணப்படும் சூரிய உதயம், சிங்கப்பாறை உள்ளிட்ட புகழ்பெற்றவை. கரடுமுரடான இந்த பாதையில் ஜீப்பில் மட்டுமே செல்ல முடியும். அழகு அதிகம் இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருப்பது போல் இங்கு ஆபத்தான செங்குத்தான மலைப்பகுதிகளும் உள்ளன. சிறிது கவனம் சிதறினாலும் மரணம்தான்.
இங்கு அடிக்கடி மழை பெய்வதால் பாறைகள் வழுக்கும். இந்த ஆபத்தான சுற்றுலாவிற்கு நிறைய பேர் வந்து செல்கிறார்கள். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (31), தனது நண்பர்கள் 5 பேருடன் நேற்று காலை கொழுக்குமலைக்குச் சென்றார்.
தேனி மாவட்டம், குரங்கணி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிங்கப்பாறை பகுதிக்கு வந்த இவர்கள், அங்கு போட்டோ எடுக்க முயன்றனர். அப்போது கார்த்திக் திடீரென தலைச்சுற்றி 500 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தார்.
இதுகுறித்து ஜீப் டிரைவர்கள், நண்பர்கலின் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் வருகை தந்தனர். அப்போது கயிறு கட்டி சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார்த்திக்கை மீட்டனர்.
அவரது உடலில் பலத்த காயங்கள் இருப்பதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை அறிந்த கார்த்திக்கின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர்.
இந்த இடத்தில் அண்மையில் நடந்த விபத்துகளை பார்க்கலாம்.
கடந்த ஜூன் மாதம் நண்பர்களுடன் சுற்றுலா வந்த சென்னையைச் சேர்ந்த திராவினேஷ் (25) என்பவர் கொழுக்குமலை பள்ளத்தாக்கின் 400 அடி ஆழ பகுதியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த மலையேற்றக் குழுவினர் கொழுக்குமலையில் இருந்து குரங்கணி நோக்கி மலைப்பாதையில் சென்ற போது எதிர்பாராதவிதமாக தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இந்த கொழுக்குமலை பகுதியில் உள்ள பாறைகள் வழுக்கும் என்பதால் அதன் விளிம்பிற்கு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாறைகள் மீது ஜீப் ஏறும் போதும் இறங்கும் போதும் வழுக்கி, கட்டுப்பாட்டை இழந்து சரிவில் சறுக்கிய சம்பவங்களும் கவிழ்ந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
அதனால்தான் எப்போதுமே தெரியாத பகுதி, தெரியாத நீர்நிலைகள், தெரியாத மலை பாதைகளில் செல்லும் போது கவனமுடன் இருக்க வேண்டும் என்கிறார்கள்.


