Last Updated:
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள நெட்டூரில் 1964 ஆம் ஆண்டு பிறந்த வி.டி.சதீசன், கேரள உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.
கேரளத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், 10 நாட்கள் இழுபறிக்கு பிறகு புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
140 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஐனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும், முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் அம்மாநில மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இடையே போட்டி நிலவியது.
இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் தீபா தாஸ் முன்சி, கேரளத்தின் முதலமைச்சராக வி.டி.சதீசன் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள நெட்டூரில் 1964 ஆம் ஆண்டு பிறந்த வி.டி.சதீசன், கேரள உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். தேசிய மாணவர் சங்கத்தில் செயலாளராக இருந்த அவர், மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவராகவும் இருந்தார்.
1996 ஆம் ஆண்டு பரவூர் தொகுதியில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட சதீசனுக்கு தோல்வியே கிட்டியது. அதன் பிறகு, 2001 ஆம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.டி.சதீசன், 2006 முதல் 2026 வரை வெற்றியை மட்டுமே ருசித்து, பரவூர் தொகுதியை தனது கோட்டையாக மாற்றினார்.
கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சதீசன், பொதுமக்களின் பிரச்னைகள், நிர்வாக குறைபாடுகள், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த வி.டி.சதீசன் தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Chennai,Tamil Nadu


