மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்துக்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெறும் மோதலின் தொடர்ச்சியாக ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் பல நாடுகளை இலக்காகக் கொண்டு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலை சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் நோக்கி பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புஜைரா பகுதியில் ஒரு ட்ரோன் இடைமறிக்கப்பட்ட போது விழுந்த சிதிலங்களால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய எண்ணெய் விநியோகம்
இந்த சம்பவத்துக்குப் பின்னர் புஜைராவில் சில எண்ணெய் ஏற்றுமதி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்காற்றும் இந்த துறைமுகம் தினமும் சுமார் ஒரு மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது.
இதற்கிடையில், துபாயில் ஒரு ட்ரோன் அல்லது ஏவுகணை இடைமறிக்கப்பட்ட போது அதன் சிதிலங்கள் ஒரு கட்டிடத்தின் வெளிப்புறத்தில் விழுந்ததாகவும், ஆனால் எந்த சேதமும் அல்லது காயங்களும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்க படைகள் ஈரானிய தீவுகளை தாக்கியதற்குப் பதிலடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்க நலன்கள், துறைமுகங்கள் மற்றும் இராணுவ தளங்கள் சட்டபூர்வமான இலக்குகள் என அறிவித்துள்ளது.
கட்டாரில் இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதல்களின் பின்னர் சில பகுதிகளில் தற்காலிக வெளியேற்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.
கார்க் தீவிலுள்ள இராணுவ இலக்கு
அதே நேரத்தில், சவுதி அரேபியாவிலும் பல ட்ரோன்கள் மற்றும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், குவைத்தில் உள்ள ஒரு விமானப்படை தளத்தை நோக்கிய தாக்குதலில் மூன்று இராணுவ வீரர்கள் சிறிய காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், ஈரானின் கார்க் தீவிலுள்ள இராணுவ இலக்குகளை அமெரிக்கா தாக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும் அங்கு உள்ள எண்ணெய் கட்டமைப்புகள் தாக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் இரு தரப்பினரின் தாக்குதல்கள் தொடர்வதால் நிலைமை மேலும் பதற்றமடைந்துள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

