விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் வளர்ப்பு நாய் கடித்து மகன் இறந்துபோனதை தாங்கிக்கொள்ள முடியாமல் தந்தையும் உயிரிழந்துள்ளது அங்கு வசிக்கும் மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள எகுவபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிங்க ராவ், 55. இவரது மகன் பார்கவ், 23.
போக்குவரத்து ஊழியராகப் பணியாற்றி வந்த நரசிங்க ராவின் வீட்டில் கடந்த ஐந்தாண்டுகளாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். இந்த நாய், கடந்த மாதம் நரசிங்க ராவின் மகன் பார்கவை கடித்துள்ளது. இதனால் அவருக்கு ரேபிஸ் நோய் பரவி உயிரிழந்துள்ளார்.
திடீரென்று மகன் பார்கவ் உயிரிழந்ததால், இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, படுத்த படுக்கையான நரசிங்க ராவ் புதன்கிழமை உயிரிழந்தார். நாய் என்னவானது என்ற விவரம் தெரியவில்லை.


