சென்னையைச் சேர்ந்த டிஜிட்டல் பொறியியல் நிறுவனமான இண்டியம் சாப்ட்வேர் தனது பெயரை இண்டியம் என மாற்றம் (ரீபிராண்ட்) செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், வரும் நிதியாண்டில் ரூ.1,300 கோடி வருவாய் ஈட்டவும் அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இணை நிறுவனரும், சிஇஓ-வுமான ராம் சுகுமார் தெரிவித்ததாவது: ஏஐ நடைமுறை நிறுவனத்தின் முக்கிய கருப்பொருளாக மாறியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை பங்கு மற்றும் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனை கருத்தில்கொண்டு இண்டியம் சாப்ட்வேர் என்ற நிறுவனத்தின் பெயரை ரீபிராண்டாக இண்டியம் என மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் 25 ஆண்டு கால செயல்பாட்டை நிறைவு செய்யும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2020-21-ல் ரூ.130 கோடியாக நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்காண்டு சிறப்பான முறையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில், ஏஐ உதவியுடன் நிதி சேவைகள், சுகாதாரம், கேமிங் உள்ளிட்ட துறைகளுக்கு சிறப்பான டிஜிட்டல் பொறியியல் தீர்வுகளை வழங்குவதன் மூலம் வரும் 2025-25-ல் வருவாயை 10 மடங்கு அதிகரித்து ரூ.1,300 கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு ஐபிஓ வெளியீட்டின் மூலம் நிதி திரட்டும் திட்டம் எதுவும் நிறுவனத்துக்கு இல்லை. இவ்வாறு ராம் சுகுமார் தெரிவித்தார்.