சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளநிலையில், ஆளும் பாஜக வேட்பாளர் ஓம் பிர்லாவை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் மனு தாக்கல் செய்துள்ளார்.
18 ஆவது மக்களவையில் புதிய எம்பிக்கள் பதவியேற்கும் பொருட்டு இடைக்கால சபாநாயகராக பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், 8 முறை எம்பியாக இருந்த காங்கிரசின் கொடிக்குன்னிலை நியமிக்க வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், மக்களவைத் தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் மரபை பின்தொடர காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரவு கோரினார்.
அவரிடம், பாஜகவின் மக்களவைத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும், ஆனால், மரபுப்படி மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கவும் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி இருந்தார். மீண்டும் அழைப்பதாக கூறிய ராஜ்நாத் சிங், திரும்ப அழைக்கவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில், 2 ஆவது முறையாக சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா மனுத்தாக்கல் செய்தார். அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக எம்பி ஆ.ராசா, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
