Last Updated:
பெங்களூருவில் ஐடி ஊழியர் ஷில்பா, வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்ததாக புகார்; பிரவீன் கைது செய்யப்பட்டு, காவல்துறை விசாரணை நடக்கிறது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கர்ப்பிணியாக இருந்த ஐடி ஊழியர், வரதட்சணை கொடுமையால், தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அடுத்த சுத்தகுண்டேபாளையாவை சேர்ந்த பிரவீன் மற்றும் கோப்பல்லை சேர்ந்த ஷில்பாவிற்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், 35 லட்சம் ரூபாய் செலவில் திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார், 150 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்தனர்.
திருமணமான ஓராண்டில் ஐடி பணியை துறந்த பிரவீன், பெங்களூருவில் பானி பூரி கடையை தொடங்கி உள்ளார். இதற்காக மனைவி வீட்டாரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்ட பிரவீன், தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், ஷில்பா மீண்டும் கர்ப்பம் தரித்தார்.
இந்நிலையில், ஷில்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக முதலில் பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்த பிரவீன், பின்னர் ஷில்பா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். இதனால், சந்தேகம் அடைந்த ஷில்பாவின் தாயார், காவல்நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகளை வரதட்சணை கொடுமை செய்து பிரவீன் சித்ரவதை செய்து வந்ததாக குற்றம்சாட்டினார். வரதட்சணை கொடுமை புகாரில், பிரவீனை கைது செய்த காவல்துறையினர், அவர் கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
August 29, 2025 9:44 AM IST


