Last Updated:
நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்து பலர் உயிரிழந்த நிலையில் பலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர்.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்திருக்கிறது.
கேரளாவில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலையில் பெருமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்து பலர் உயிரிழந்த நிலையில் பலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர்.
இந்நிலையில் கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் வயநாட்டில் தற்போது மீண்டும் கன மழை கொட்டி வருகிறது. அதன்படி, வயநாடு மாவட்டம் மேப்பாடி பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மேப்பாடி அருகே கல்லடி இரட்டை சுரங்கப்பாதை கட்டுமானம் நடந்து வருகிறது. இந்த கட்டுமானப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பலர் மண்ணுக்கு அடியில் சிக்கினர். இதுவரை 6 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் 18 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. கமாண்டன்ட் ஸ்ரீ அகிலேஷ் குமார் அவர்களின் உத்தரவின் பேரில், மொத்தம் 60 வீரர்களைக் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டன. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக மீட்பது, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை மேற்கொள்வது, மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற மீட்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளையும் மேற்கொள்வது ஆகிய பணிகளில் பேரிடர் மீட்புப் படை ஈடுபட்டு வருகிறது.
கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவல்படி, இந்த நிலச்சரிவு சம்பவம் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய ஒரு மண்சரிவு எனக் கூறப்பட்டுள்ளது. இது இயற்கையான நிலச்சரிவு அல்ல. கட்டுமானப் பணியின் போது மண்ணும் சரிவில் கீழ்நோக்கி நகர்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
எனினும், பாதிக்கப்பட்ட பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 265 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது நிலத்தின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது என்பதால் கேரள மாநில அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கின்றனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு… 24 மணி நேரத்தில் 265 மி.மீ பெய்த மழை – மண்ணுக்கடியில் சிக்கிய 18 பேர்? | Wayanad


