கோலாலம்பூர் :
வனவிலங்குகள் உயிரிழப்புகளைத் தடுக்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக இயற்கை நிதியம் (WWF-மலேசியா) அழைப்பு விடுத்துள்ளது.
இதில் முக்கிய வனவிலங்கு கடக்கும் இடங்களில் வேகத்தடைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை ஓட்டுநர்கள் வேகத்தைக் குறைப்பதால் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றவும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் கட்டாயப்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான தலையீடாகக் கருதப்படுகிறது.
கடந்த அன்னையர் தினத்தன்று ஏற்பட்ட துயரச் சம்பவம் பலரைச் சோகத்தில் ஆழ்த்தியது.
பேராக் மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலையில் யானைக் குட்டி மீது லோரி ஒன்று மோதியதில் அந்த யானைக் குட்டி மடிந்தது. தந்து குட்டி மடிந்துவிட்டது என்று தெரியாமல் அதைக் காப்பாற்ற தாய் யானை சிரமப்பட்ட காட்சிகள் காணொளியில் பதிவாகின.
இறந்த யானைக்குட்டியின் உடலை விட்டுச் செல்லாமல் தாய் யானை அங்கேயே இருந்தது. இணையத்தில் வலம் வந்த இக்காட்சிகள் பார்ப்போர் மனதை உருக்கின.
சமூக வலைத்தளங்களில் இக்காணொளியைக் கண்ட சிலர் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுப்புற அமைச்சர் நிக் நாஸ்மி நிக் அகமட் , பொதுப் பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி ஆகியோரை ‘டேக்’ செய்தனர்.
இம்மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்கவும் வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பலர் அழைப்பு விடுத்துள்ளனர்.
லோரி ஓட்டுநருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் குரல் எழுப்பினர்.
இந்நிலையில் யானைக் குட்டி திடீரென்று சாலையின் குறுக்கே ஓடியதாக லோரி ஓட்டுநர் தெரிவித்தார்.


