வந்தே பாரத் Vs ஹைட்ரஜன் ரயில்: டிக்கெட் கட்டணம் முதல் பாதுகாப்பு வரை.. எது சிறந்தது தெரியுமா?
பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்திய ரயில் சேவைகளில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ரயில் சேவைகளையே பிரதானமாக பயன்படுத்துவதால் ரயில் போக்குவரத்தில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது.
இந்தியாவில் முதன்முறையாக ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் ரயில் சேவைக்கும் நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பயணிகள் தெரிந்து வைத்து கொள்வது நல்லது.

பிரதமர் மோடி ரயில்வே துறையில் பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில், ஹரியானாவின் ஜிந்த் நிலையத்தில் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நமோ கிரீன் ரயில் எனப்படும் ஹைட்ரஜன் ரயில்கள் , ஹைட்ரஜன் எரிபொருள் செல்களில் இருந்து ஆற்றலை பெற்றி இயங்குகின்றன, அதே வேளையில் வந்தே பாரத் ரயில்கள் மின்சாரத்தில் இயக்கப்படுகின்றன.
வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 160 கி.மீ வரை செல்லும், நமோ ரயில்கள் மணிக்கு 75 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டவை. வந்தே பாரத் ரயில்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணங்களுக்கு உகந்தவை. ஹைட்ரஜன் ரயில்கள் குறுகிய கால பயணங்களுக்கு பொருத்தமானவை. வந்தே பாரத் மின்சாரத்தில் இயங்குவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது குறைவு, ஹைட்ரஜன் ரயில்கள் நீராவி மட்டுமே வெளியேற்றுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

ஹைட்ரஜன் ரயில்கள் 10 பெட்டிகள் கொண்டவை 682 பயணிகள் அமர்ந்து செல்லலாம் மொத்தமாக 2,600 பயணிகள் வரை பயணிக்கலாம். ஆனால் வந்தே பாரத்தில் 16 பெட்டிகள் உள்ளன, விமானங்களூக்கு நிகரான வசதிகள் கொண்டுள்ளது. ராஜ்தானி , சதாப்தி ரயில்களுக்கு மாற்றாக நீண்ட தூர பயணங்களுக்கு கொண்டு வரப்பட்டது வந்தே பாரத். அதே வேளையில் குறுகிய தூர பயணங்களுக்கு அதிக சுற்றுசுழல் மாசு ஏற்படுத்தாத வகையில் ஹைட்ரஜன் ரயில்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஹைட்ரஜன் ரயில், ஹைட்ரஜன் எரிபொருள் செல்களைப் பயன்படுத்தி இயங்குகிறது. இது சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காமல், நீராவியை மட்டுமே கழிவாக வெளியேற்றுகிறது. பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் மிக குறைந்த கட்டணமாக 5 முதல் 25 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் வந்தே பாரத் ரயில் கட்டணம் 500 முதல் 2500 ரூபாய் வரை இருக்கும்.
வந்தே பாரத் மற்றும் ஹைட்ரஜன் ரயில் ஆகிய இரண்டுமே இந்திய ரயில்வேயின் வெவ்வேறு தேவைகளை பூர்த்தி செய்கின்றன. வந்தே பாரத் இந்தியாவின் அதிவேக மற்றும் நவீன பயண அனுபவத்தை முன்னிலைப்படுத்துகிறது, ஹைட்ரஜன் ரயில் இந்தியாவின் நெட்-ஜீரோ அதாவது கார்பன் உமிழ்வு இல்லாத எதிர்காலத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக உள்ளது. வரும் நாட்களில் நிச்சயம் இரண்டு வகை ரயில்களுமே இந்திய ரயில் நெட்வொர்க்கில் ஆதிக்கம் செலுத்துவது உறுதி. இரண்டுமே அவற்றுக்கே உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் தான் இயக்கப்படுகின்றன.
