Cricket
oi-Yogeshwaran Moorthi
பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் வடக்கு மண்டல அணிக்கு எதிரான போட்டியில் மேற்கு மண்டல அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அழுத்தமான நேரத்தில் அபாரமாக விளையாடி 70 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகினார். முதல்தர கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட் ரன் அவுட்டாவது இதுவே முதல்முறையாகும்.
இந்திய டெஸ்ட் அணிக்குள் வருவதற்காக ருதுராஜ் கெய்க்வாட் நீண்ட காலமாகவே போராடி வருகிறார். இருமுறை இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட போதும், அவர் காயம் காரணமாக விளையாட முடியவில்லை. இதனால் இந்திய ஏ அணியில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் துலீப் டிராபி தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது.

அதற்கேற்ப மேற்கு மண்டல அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் வடக்கு மண்டல அணிக்கு எதிரான போட்டியில் மேற்கு மண்டல அணி களமிறங்கியது. இதில் முதலில் இன்னிங்ஸில் வடக்கு மண்டல அணி அன்சுல் கம்போஜின் அதிரடி ஆட்டத்தால் 251 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய மேற்கு மண்டல அணி 187 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் ஆட்டமிழந்ததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதன்பின் 2வது இன்னிங்ஸில் வடக்கு மண்டல அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் மேற்கு மண்டல அணி வெற்றிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அப்போது தொடக்க வீரர்கள் சொதப்ப, ருதுராஜ் கெய்க்வாட் களம் புகுந்தார்.
தொடக்கம் முதலே பவுண்டரியாக விளாசி தள்ளிய ருதுராஜ் கெய்க்வாட் 46 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 66 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டாகி வெளியேறினார். முதல்தர கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட் ரன் அவுட்டாவது இதுவே முதல்முறையாகும். இதனால் ரசிகர்கள் சோகம் அடைந்தனர்.
இந்தப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சியும் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஏனென்றால் ஸ்பின்னர்களை சரியான நேரத்தில் பயன்படுத்தும் கலையை ருதுராஜ் கெய்க்வாட் நன்றாக கற்றுக் கொண்டிருப்பதை காண முடிந்தது. தனுஷ் கோட்டியானை முதல் ஓவர் வீச வைத்து அட்டாக்கில் கொண்டு வந்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

