நிலையான வைப்புத்தொகைகள் (FD) பாதுகாப்பான முதலீட்டு வழியாக பலரால் விரும்பப்படுகின்றன. ஆனால், அவசர நிலைகளில் அல்லது திடீர் பணத் தேவையின் போது, அவற்றை முதிர்ச்சிக்கு முன்பாகவே முறிக்க வேண்டிய சூழல் வரலாம். ஆனால், அதனை எப்போது, எப்படி முறித்தால் வட்டியை இழக்காமல், பணத்தை திரும்பப் பெறலாம்? என்பது தான் பலரின் கேள்வியாக இருக்கிறது. இந்தக் கட்டுரையில், FD முறிப்பின் போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய நுணுக்கங்களையும், திட்டமிட்ட முறையில் அதைப் பராமரிக்கும் வழிகளையும் பார்ப்போம்.
நிலையான வைப்புத்தொகைகள் (FD) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உறுதியான வட்டியை வழங்கினாலும், முதிர்ச்சிக்கு முன்பாக அவை முறிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். பொதுவாக இது வட்டி விகிதத்தில் 0.5% – 1% வரையிலான குறைப்பாக இருக்கும். சில சமயங்களில் பகுதி அல்லது முழு வட்டியையும் இழக்க நேரிடும். ஆனால் முன்கூட்டியே திட்டமிட்டால், வருவாய் இழப்பைத் தவிர்க்க முடியும்.
எப்போது முறிக்கலாம்?
FD-ஐ எப்போது முறிக்க வேண்டும் என்பதை கவனமாகத் தேர்ந்தெடுப்பது முக்கியம். வங்கிகள் காலாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் தான் வட்டியை கணக்கிடுகின்றன. எனவே, அந்த நேரம் முடிந்தவுடன் முறித்தால், கிடைக்க வேண்டிய வட்டி முழுவதையும் பெறுவீர்கள், வரவு தேதிக்கு முன் முறித்தால், குறிப்பிட்ட அந்தக் காலத்திற்கான வட்டியே குறைந்து போகும்.
பகுதி தொகையை திரும்பப் பெறுதல்
சில வங்கிகள் FD-ஐ முழுமையாக முறிக்காமல், தேவையான தொகையை மட்டும் திரும்பப் பெறும் வசதியை தருகின்றன. உதாரணமாக, ரூ.2 லட்சம் FD-யிலிருந்து ரூ.50,000 எடுப்பது, மீதமுள்ள தொகையில் வட்டியை தொடர அனுமதிக்கும்.
அபராதம் இல்லாத சூழல்கள்
– வரி சேமிப்பு அல்லது சிறப்பு FD-களில் முன்கூட்டிய முறிப்பு அனுமதிக்கப்படாது.
– ஆனால் சாதாரண FD-களில் மருத்துவ அவசரம், வைப்பாளரின் மரணம் அல்லது அதே வங்கியில் மீண்டும் முதலீடு செய்வது போன்ற சந்தர்ப்பங்களில் அபராதம் தள்ளுபடி செய்யப்படும்.
– நீண்டநாள் வாடிக்கையாளர்களுக்கு, பேச்சுவார்த்தை மூலம் கூட வங்கி அபராதத்தை தவிர்க்கலாம்.
மூலோபாய முறைகள்
* ஒரு பெரிய FD ஒன்றுக்குப் பதிலாக பல சிறிய FD-களை வைத்தால், தேவைக்கேற்ப ஒன்றை மட்டுமே முறிக்கலாம்.
* வங்கியில் “ஸ்வீப்-இன்” வசதி இருந்தால், சேமிப்புக் கணக்கில் இருக்கும் அதிகபட்சம் தானாகவே FD ஆக மாறி, தேவைக்கு ஏற்ப அபராதம் இல்லாமல் திரும்பப் பெற உதவலாம்.
பொதுவாகவே, FD-க்கள் என்பது நீண்டகால முதலீட்டுக்கு உகந்தவையாக இருந்து வருகிறது. ஆனால், அவசர நிலைகளில் பணத்தை எடுக்க வேண்டிய சூழல் என்பது தவிர்க்க முடியாதது. எனவே, வங்கியின் விதிமுறைகளைப் புரிந்துகொண்டு, சரியான நேரத்தில் முறிப்பது அல்லது பகுதி முறிப்பு போன்ற விருப்பங்களைப் பயன்படுத்துவது, ஒருவரின் பணப் புழக்கத்தையும், வட்டி வருமானத்தையும் சமநிலைப்படுத்த உதவும். சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால், FD முறிப்பை பொருளாதார ரீதியாக மிகக் குறைந்த செலவில் சமாளிக்க முடியும்.
August 31, 2025 12:33 PM IST

