Last Updated:
மத்திய நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு, முதல்முறையாக கடன் பெறுபவர்களின் விண்ணப்பத்தை சிபில் ஸ்கோர் அடிப்படையில் நிராகரிக்க வேண்டாம் என அறிவுறுத்தியது.
முதல்முறையாக கடன் பெறுபவர்களின் விண்ணப்பத்தை ’சிபில் ஸ்கோர்’ அடிப்படையில் நிராகரிக்கக் கூடாது என மத்திய நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தனிநபர்கள் கடன் பெறும்போது, அவர்களுக்கு ‘சிபில் ஸ்கோர்’ மதிப்பீடு அவசியமாகிறது. `சிபில் ஸ்கோர்’ என்பது கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன், அவரிடம் உள்ளதா என்பதை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அறிந்து கொள்வதற்கான மதிப்பீடாக உள்ளது. ஒரு நபரின் ’சிபில் ஸ்கோர்’ எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு கடனை பெறும் தகுதியை அவர் பெற்றிருக்கிறார் என்பது அர்த்தம்.
`சிபில் ஸ்கோர்’ சிறப்பாக இருக்கும்பட்சத்தில் கிரெடிட் கார்டுகள் எளிதாக கிடைக்கும் என்பது மட்டுமின்றி, வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குறைந்த வட்டியில் போட்டிப்போட்டுக்கொண்டு கடன் வழங்க முன்வரும் என்பது நிதர்சனம். அப்போது, அதிக தொகையை கடன் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதோடு, Processing fee எனப்படும் செயலாக்கக் கட்டணத்தை தள்ளுபடி செய்யவும் வாய்ப்புண்டு.
டிரான்ஸ் யூனியன் சிபில், எக்ஸ்பீரியன், CRIF, ஈக்விஃபாக்ஸ் போன்ற நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன், கிரெடிட் ஸ்கோரை மதிப்பீடு செய்யும் கிரெடிட் பீரோக்களாக செயல்படுகின்றன. இவற்றில் ’டிரான்ஸ் யூனியன் சிபில்’ என்ற நிறுவனம் பொதுவாக அனைவரும் அறிந்த ’சிபில் ஸ்கோர்’ என்ற கிரெடிட் மதிப்பீட்டை வழங்குகிறது. இந்நிறுவனங்கள் கிரெடிட் ஸ்கோரை 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்களில் மதிப்பீடு செய்து வழங்குகின்றன.
இதில் 720 முதல் 900 வரை ‘கிரெடிட் ஸ்கோர்’ வைத்திருப்பவர்களுக்கு கடன் பெறுவது எளிதாக இருக்கும். அதேநேரம், புதிதாக பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் இதுவரை கடன் வாங்காதவர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் கணக்கிட முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு கடன் கிடைப்பது கடினமாக இருந்து வந்தது.
இந்நிலையில், முதன்முறையாக கடன் பெறுபவர்களுக்கு குறைந்தபட்ச ‘சிபில் ஸ்கோர்’ தேவையில்லை என நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், ’சிபில் ஸ்கோர்’ தொடர்பான ரிசர்வ் வங்கியின் நிலைப்பாட்டை விவரித்தார். அப்போது, கடன் கோரி முதல்முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு ’சிபில் ஸ்கோர்’ குறைவாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ இருந்தால், அதை காரணம் காட்டி விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார்.
கடன் விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச ’சிபில் ஸ்கோரை’ ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் புதிதாக கடன் பெறுபவர்களுக்கு ‘சிபில் ஸ்கோர்’ ஒரு பெரிய பிரச்னையாக இருக்காது, அதேநேரம் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் விண்ணப்பதாரரின் கடன் திரும்ப செலுத்தும் திறனை மதிப்பாய்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
August 25, 2025 6:56 AM IST


