டாக்கா வங்காளதேசத்தில் 13-வது தேசிய நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் கடந்த 12-ந்தேதி நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கையும் உடனடியாக நடந்து முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், வங்காளதேச தேசியவாத கட்சி வேட்பாளர்கள் 209 இடங்களில் வெற்றி பெற்றனர்.
அக்கட்சி தலைமையிலான கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான அளவுக்கும் கூடுதலாக, மொத்தம் 212 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 68 இடங்களை வென்றுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்காளதேச தேசியவாத கட்சியை சேர்ந்த தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த முறை ஜனாதிபதி அரண்மனைக்கு பதிலாக, தேசிய நாடாளுமன்ற வளாகத்தின் தெற்கு பிளாசா பகுதியில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வங்காளதேச தேசியவாத கட்சியின் உறுப்பினர்கள் சேர்ந்து தாரிக்கை நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
இதனை தொடர்ந்து, தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பொறுப்பேற்றார். அவருக்கு வங்காளதேச ஜனாதிபதி முகமது சஹாபுதீன் பதவி பிரமாணம் செய்து வைத்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டு இருந்தது.
இதனையேற்று இந்தியா சார்பில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சென்றுள்ளார். அந்நாட்டின் டாக்கா விமான நிலையத்திற்கு சென்று சேர்ந்த அவரை வங்காளதே வெளியுறவு அமைச்சக செயலாளர் நஜ்ருல் இஸ்லாம் வரவேற்றார்.
இதன்பின்னர் பிரதமர் தாரிக் ரஹ்மான் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓம் பிர்லா சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், வங்காளதேசத்தின் டாக்கா நகரில் இன்று நடந்த பிரதமர் தாரிக் ரஹ்மானின் புதிய அரசு பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிந்ததற்காக நான் மகிழ்ச்சி தெரிவிக்கிறேன்.
ஜனநாயகம், முன்னேற்றம் மற்றும் அனைத்தும் உள்ளடக்கிய நாடு என வங்காளதேச நாட்டை கட்டமைப்பதற்கான முயற்சிக்கு ஆதரவு அளிக்க இந்தியா தயாராக உள்ளது என்றும் அவர் பதிவிட்டு உள்ளார்.




