டாக்கா,வங்காளதேசத்தின் வடக்கே மைமன்சிங் மாவட்டத்தில் திரிஷால் பகுதியில் இந்து தொழிலதிபர் ஒருவர் மர்ம கும்பலால் கொடிய ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
சுஷென் சந்திர சர்க்கார் (வயது 60) என்ற இந்து தொழிலதிபர் ஒருவர் கடைக்கு சென்று விட்டு, நேற்றிரவு வீடு திரும்பவில்லை. இதனால், அவருடைய குடும்பத்தினர் சந்தேகமடைந்தனர். அப்போது, அவரது மகன் பலமுறை சுஷென்னுக்கு மொபைல் போன் வழியே தொடர்பு கொண்டும், பதில் ஏதும் கிடைக்கவில்லை.
இதனால், தந்தையின் கடைக்கு அவருடைய மகன் நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது, சுஷென் கடுமையாக தாக்கப்பட்டு, பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக, சுஷென்னை மீட்டு, மைமன்சிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பலியாகி விட்டார். இதனை திரிஷால் வட்டத்திற்கு உட்பட்ட உதவி போலீஸ் சூப்பிரெண்டு ஹசன் இஸ்ராபில் இன்று உறுதிப்படுத்தி உள்ளார். இந்த படுகொலைக்கான காரணம் பற்றி உடனடியாக தீர்மானிக்க முடியவில்லை. இதனை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என கூறினார்.
இதே மாவட்டத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி தீபு சந்திரதாஸ் என்ற இந்து தொழிலாளி ஒருவரை மர்ம கும்பல் கடுமையாக தாக்கியது. ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த அவரை, தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு கூறி வெளியே அழைத்து சென்று கடுமையாக அடித்து, தாக்கி கொன்றது.
அவருடைய உடல் தூக்கிலிடப்பட்டு, தீ வைத்து கொளுத்தப்பட்டது. ஆனால் விசாரணையில் அவர் அப்படி தெய்வ நிந்தனை எதிலும் ஈடுபடவில்லை என போலீசார் தெரிவித்தனர். கடந்த 2 மாதங்களில், இதுபோன்று இந்து சிறுபான்மையினர் வங்காளதேசத்தில் அதிக அளவில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இன்னும் 2 நாட்களில் பொது தேர்தலை சந்திக்க உள்ள சூழலில், நாட்டில் வன்முறை பரவி வருகிறது




