Last Updated:
வக்ஃபு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வக்ஃபு சட்ட திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்ட வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதாக அக்குழுவில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூட்டணி கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்நிலையில், மாநிலங்களவையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, விதிமுறைப்படி அவை செயல்படவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சிகள் தவறான வாதங்களை முன்வைப்பதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளி செய்த நிலையில், நிதானத்தை இழந்த அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர், “அமைதியாக இருங்கள்” என ஆவேசமாக கூறினார். இந்நிலையில், எதிர்க்கட்சிகள் அவையை விட்டு வெளியேறினர். இதனை தொடர்ந்து, வக்ஃபு வாரிய திருத்த மசோதா மீதான கூட்டுக்குழு அறிக்கையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கரிடம் புகார் கடிதம் கொடுத்தனர்.
February 13, 2025 9:44 PM IST


