Last Updated:
பெங்களூருவில் விட்டல், வனஜாக்-ஷி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம், லிவிங் டுகெதர் உறவின் பிரச்சினையால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் லிவிங் டுகெதரில் இருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் விட்டல். கார் ஓட்டுநரான இவர் ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்து, அவர்களிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக வனஜாக்-ஷி என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த பழக்கம் நட்பாகி, காதலாக மாரியுள்ளது. வனஜாக்-ஷிக்கும் ஏற்கனவே இரு ஆண்களுடன் திருமணமாகி அவர்களை பிரிந்துள்ளார்.
விட்டல் – வனஜாக்-ஷி இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி, அந்த வாழ்க்கை நிலைக்காமல் போயுள்ளது. இதனால், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலயே கணவன் – மனைவியாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் சுமூகமாக இருந்த லிவிங் டுகெதர் லைஃப், போகப் போக புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மது போதைக்கு அடிமையான விட்டல், குடித்துவிட்டு வந்து அடிக்கடி சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான வனஜாக்-ஷி, தனக்கு ஆறுதலாக இருந்த மாரியப்பா என்பவருடன் நெருக்கம் காட்டியுள்ளார்.
இது, விட்டலுக்கு ஆத்திரமூட்டியதால் அவர்களை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், வனஷாக்-ஷி தனது புதிய காதலன் மாரியப்பாவுடன் காரில் சென்றுள்ளார். அவர்களை தனது காரில் பின்தொடர்ந்த விட்டல், சிக்னல் பகுதியில் வழிமறித்துள்ளார். அப்போது, கேனில் தயாராக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து காருக்குள் ஊற்றியுள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாரியப்பா மற்றும் கார் ஓட்டுநர் இருவரும் தப்பியோடியுள்ளனர்.
அவர்களுடன் சேர்நது வனஜாக்-ஷியும் தப்பிக்க முயற்சித்துள்ளார். வனஜாக்-ஷியை விடாமல் துரத்திய விட்டல், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், உடலில் 60 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் பட்டதால் அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விட்டலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் பெங்களூருவில் முறை தவறிய உறவால் ஏற்பட்ட பிரச்சினையில் பெண் ஒருவரின் வாயில், அவரின் ரகசிய காதலன் ஜெலட்டின் குச்சியை வெடிக்க வைத்து, கொடூரமாக கொலை செய்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் லிவிங் டுகெதரில் வாழ்ந்த பெண்ணை, அவரது காதலன் நடு ரோட்டில் ஓட ஒட விரட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
September 01, 2025 10:08 PM IST


