Courtesy: G.NICKEY THOMSON
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO) கட்சியின் தற்போதைய தலைமையின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதாகவும், உடனடியாக தேசிய மாநாட்டை நடத்தக்கோரியும் திருகோணமலை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
திருகோணமலையில் அமைந்துள்ள வெலிக்கடைத் தியாகிகள் நினைவுத் திறந்தவெளி அரங்கிற்கு முன்னால் இன்று (27) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, கட்சியின் விதிகளின்படி, தற்போதைய தலைமை மற்றும் குழுவினரின் பதவிக்காலம்
கடந்த 23.03.2026 அன்றுடன் நிறைவடைந்துவிட்டதாகவும் அவர்கள் தொடர்ந்து
பதவியில் நீடிப்பது சட்டவிரோதமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது
அத்துடன் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த தேசிய மாநாட்டைத் திட்டமிட்டுத் தள்ளிப்போடுவதன்
மூலம், உட்கட்சி ஜனநாயகம் சீர்குலைக்கப்படுவதாக உறுப்பினர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.

12வது தேசிய மாநாட்டிற்காக 8 மாவட்டங்களில் இருந்தும் புதிய பொதுக்குழு
உறுப்பினர்கள் முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு திருகோணமலையில்
தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் தலைமையே
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக உறுப்பினர்கள் கடுமையாகச்
சாடியுள்ளனர்.
ஆயுதப் போராட்ட இயக்கமாகத் தொடங்கி, இன்று ஒரு முதன்மையான அரசியல் கட்சியாக
இருக்கும் ரெலோ, சமீபகாலமாகத் தேர்தல் மற்றும் நிர்வாக ரீதியாகப் பாரிய
பின்னடைவுகளைச் சந்தித்து வருவதாகவும் கவலை
தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்புப் போராட்டம்
தங்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் “சர்வாதிகாரப் போக்குக்கு” எதிராக
இந்த எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பதாக உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இரத்தம் சிந்தி, ஆயுதம் ஏந்திப் போராடியது நீதிமன்றப் படிகளில் ஏறுவதற்காக
அல்ல” எனக் குறிப்பிட்டுள்ள அவர்கள், ஜனநாயகத்தை மதித்து புதிய தேர்வுகளை
நடத்தி, உடனடியாக 12வது தேசிய மாநாட்டை கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் மேற்குறித்த விடயங்களை உள்ளடக்கி ரெலோ கட்சியின் திருகோணமலை மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும்
கட்சி உறுப்பினர்களால் ஒருமித்த கருத்துடன் கண்டன அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

