India
oi-Vigneshkumar
லக்னோ: பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட லக்னோ கான்பூர் கிரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே திறக்கப்பட்டு, வெறும் 12 நாட்களில் சேதமடைந்துள்ளது. சாதாரண மழைக்கே அந்த சாலை சேதம் அடைந்துள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் சாலை உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு சாலை திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் சில இடங்களில் புதிதாக அமைக்கப்படும் சாலைகள் கூட போதிய தரத்தில் இல்லை. அப்படியொரு சம்பவம் தான் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

புதிய சாலை
உத்தரப் பிரதேசத்தில் ரூ.4,200 கோடி செலவில் கட்டப்பட்ட லக்னோ கான்பூர் கிரீன்ஃபீல்டு எக்ஸ்பிரஸ்வே திறந்து வைக்கப்பட்டு வெறும் 12 நாட்களிலேயே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அங்கு சமீபத்தில் கனமழை பெய்த நிலையில், மழைக்கு பிறகு சாலையின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கி விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த எக்ஸ்பிரஸ்வே ரூ.4,200 கோடி செலவில் போடப்பட்டது. கடந்த ஜூலை 13ஆம் தேதி தான் இந்த சாலை திறந்து வைக்கப்பட்டது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இந்த சாலையை திறந்து வைத்தனர்.
விரிசல்
ஆனால், திறப்பு விழா நடைபெற்ற சில நாட்களிலேயே சாலையில் விரிசல் ஏற்பட்டிருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்த நிலையில், உன்னாவ் மாவட்டத்தின் கோராரி கிராமம் அருகே சுமார் 5 முதல் 7 மீட்டர் நீளமுள்ள சாலை திடீரென உள்வாங்கி, விரிசல்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விமர்சனம்
இதன் வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த சமாஜ்வாதி கட்சியின் மதுசூதன் யாதவி, யோகி அரசை கடுமையாக சாடியுள்ளார். அந்த வீடியோவில் அவர், “லக்னோ கான்பூர் உயர்மட்ட எக்ஸ்பிரஸ்வேயில் பயணம் செய்தேன். கோராரி அருகே சாதாரண மழைக்கே சாலைகளில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. இந்த விரிசலால் பெரிய விபத்து ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது. தரமற்ற கட்டுமான பொருட்களை பயன்படுத்தியதே இதற்கு காரணம். பல ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சாலை, இரண்டு வாரங்களுக்குள் இப்படி சேதமடைவது எப்படி?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
அதிகாரிகள்
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். உடனடியாக சாலையை சீர் செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டன. இருப்பினும், சாலை ஏன் இந்தளவுக்கு சேதம் அடைந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கமும் தரப்படவில்லை.
பல ஆண்டுகள் திட்டமிட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலை, வெறும் சில நாட்களிலேயே சேதமடைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் சாலை கட்டுமானத்தில் ஏதேனும் அலட்சியம் அல்லது முறைகேடு நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.




