சிறுவனின் குடும்பத்தினா் ரஹீமை மன்னிக்க முன்வராத காரணத்தால், கடந்த 2018-ஆம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மரண தண்டனை உறுதியானது.
இதனிடையே, ரஹீமை மன்னிக்க ஒப்புக்கொண்ட சிறுவனின் குடும்பம், தங்களுக்கு இழப்பீடாக ஏப்ரல் 18-ஆம் தேதிக்குள் 15 மில்லியன் சவூதி ரியால் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.34 கோடி) வழங்க வேண்டுமென கோரியது.
ஆட்டோ ஓட்டுநராக இருந்த ரஹீம், கடந்த 2006ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு ஒரு குடும்பத்தில் கார் ஓட்டுநராக பணியாற்றச் சென்றார். அந்தக் குடும்பத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனையும் பராமரிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக ஒரு நாள் ரஹீமின் கை, அந்தச் சிறுவனின் தொண்டையுடன் இணைக்கப்பட்டிருந்த டியூப் மீது பட்டு, சிறுவன் மயக்கமடைந்து பிறகு மரணமடைந்தான். இதனால், ரஹீம் மீது கொலை வழக்குப் பதிவு செய்து மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, ரஹீமை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கிய ஒரு குழுவினா், பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் இணையவழியில் பொது நிதி திரட்டும் (கிரெளட் ஃபண்டிங்) முயற்சியை முன்னெடுத்தனா். இதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலி மூலம் ஆயிரணக்கான மக்களிடமிருந்து ரூ.34 கோடி திரட்டப்பட்டுள்ளது. ரஹீம் தாயின் 18 ஆண்டுகால கண்ணீர் தற்போது புன்னகையாக மாறியிருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை திரட்டி, தனது மகனைக் காப்பாற்ற முடியும் என்று தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால், எனது பிரார்த்தனையை மட்டும் கைவிடவில்லை என்கிறார் பாத்திமா.
சில நாள்களுக்கு முன்பு வரை சொற்ப நிதியே திரட்டப்பட்டிருந்ததாகவும், கடந்த 4 நாள்களில் மிகப் பெரிய அளவில் நிதி திரட்டப்பட்டதாகவும் அந்த குழுவினா் தெரிவித்தனா். நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் 6 கோடி வரை திரட்டப்பட்டது. முழுத் தொகையும் கிடைத்ததும், வெள்ளிக்கிழமை 3 மணிக்கு பணம் திரட்டும் பணி நிறுத்தப்பட்டது. சில மசூதிகள், தொழுகைக்கு வரும் நபர்களிடம் பணம் வசூலித்து இந்தக் குழுவிடம் கொடுத்திருக்கிறார்கள்.
மொபைல் செயலி மட்டுமல்லாமல், வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலமாகவும் நிதி திரட்டப்பட்டதாகவும், நிதியளித்த பெரும்பாலான மக்கள் சாதாரண ஏழை மக்கள்தான். தங்களது பின்னணியை எல்லாம் யாரும் நினைக்கவில்லை. ஆட்டோ ஓட்டுநர் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை பலரும் இந்த செயலுக்கு கைகோர்த்துள்ளனர்.
இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, இதுதான் கேரளத்தின் உண்மையான கதை என்று முதல்வா் பினராயி விஜயன் பாராட்டியுள்ளாா். மனிதாபிமான நோக்கத்துக்காக கைகோத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.
கேரளத்துக்கு ஒன்று என்றால், ஒட்டுமொத்த கேரளமும் அங்கு இருக்கும்.

