இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) நாட்டின் நெடுஞ்சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2025 நிதியாண்டில் 5,614 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து, அதன் இலக்கான 5,150 கி.மீ. தூரத்தை பூர்த்தி செய்துள்ளது என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சாதனை இந்தியா முழுவதும் சாலை இணைப்பை மேம்படுத்துவதற்கான ஆணையத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஒரு நிதியாண்டில் அதன் அதிகபட்ச மூலதனச் செலவையும் பதிவு செய்துள்ளது. அதாவது, 2024-25 நிதியாண்டில் நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கான மொத்த செலவு ரூ.2,50,000 கோடியை (தற்காலிகமாக) எட்டியுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.2,40,000 கோடியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொத்த செலவும், அரசாங்க பட்ஜெட் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சொந்தமான வளங்கள் என இரண்டில் இருந்தும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கடந்த, 2023-24 நிதியாண்டில் செலவிடப்பட்ட ரூ.2,07,000 கோடியுடன் ஒப்பிடும்போது இந்த நிதியாண்டில், செலவினம் சுமார் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், 2022-23 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இந்த நிதியாண்டில் குறிப்பிடத்தக்கதாக உயர்வையே சந்தித்துள்ளது, அதாவது, ரூ.1,73,000 கோடியிலிருந்து 45 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்க தருணம்.. பிரதமர் மோடி பெருமிதம்!
நெடுஞ்சாலைகளை மேம்படுத்த தேவையான நிதியை திரட்ட தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சுங்கச்சாவடி பரிமாற்றம் (TOT), உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை (InvIT) மற்றும் சுங்கப் பத்திரமயமாக்கல் போன்ற மூன்று வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தி இருக்கிறது.
மேற்கண்ட முயற்சிகளின் மூலம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.28,724 கோடி வருவாயை ஈட்டி இருக்கிறது. இதில், ஒரு முக்கிய மைல்கல்லாக, இதுவரை இல்லாத அளவில் உள்கட்டமைப்பு முதலீடு (InvIT) ஒரு சுற்றில் ரூ.17,738 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.
இதையும் படிக்க: சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்.. மாநிலங்களவையில் மத்திய அரசு முக்கிய தகவல்!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் உலகத்தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகளை உருவாக்குவதில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்த உள்கட்டமைப்பு மேம்பாடுகள், சாலை வலையமைப்பை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் அதிகரிக்கும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த மாதம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் பிரிவான தேசிய நெடுஞ்சாலைகள் இன்ஃப்ரா டிரஸ்ட் (NHIT), அதன் நான்காவது சுற்று நிதி திரட்டலை வெற்றிகரமாக முடித்ததாக தெரிவித்துள்ளது. மேலும், அதில் தோராயமாக ரூ.18,380 கோடி நிறுவன மதிப்பைப் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.
மார்ச் 26ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்திய நெடுஞ்சாலைத்துறையின் வரலாற்றில், இது மிகப்பெரிய வருவாய் ஈட்டும் ஒப்பந்தமாகும். நெடுஞ்சாலை சொத்துக்களை அரசாங்கத்திற்கு பணமாக வழங்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், 2020இல் ஒரு உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளையை (InvIT) நிறுவியது. இந்த சமீபத்திய பரிவர்த்தனையின் மூலம், நான்கு சுற்றுகளிலும் திரட்டப்பட்ட மொத்த தொகையின் மதிப்பு ரூ.46,000 கோடியைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
April 04, 2025 12:49 PM IST
ரூ.2.5 லட்சம் கோடி செலவில் 5614 கி.மீ. தூர நெடுஞ்சாலைகள்… தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் புதிய சாதனை…!

